திருச்சி அருகே இளம்பெண்ணின் கழுத்தறுத்து கொலை.. கொள்ளிடம் ஆற்றில் புதைத்த காதலன் கைது
திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே துடையூர் கொள்ளிடம் ஆற்றில் இளம்பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்து மண்ணில் புதைத்த உறவுக்கார காதலனை கைது செய்த போலீசார் புதைத்த இடத்தை கொலையாளி போலீஸாரிடம் அடையாளம் காட்டினார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பன்னீர்குத்தி ஊராட்சி ஆண்டிவலசு பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது 2-ஆவது மனைவி சடையம்மாள். இவர்களுக்கு ஒரு மகன்,4 மகள்கள் உள்ளனர். இவர்களது மூத்த மகளான வெள்ளையம்மாளுக்கு (22).
3 வருடங்களுக்கு முன் திருமணமாகி 3 மாதத்திலேயே விவாகரத்து பெற்றார்.
இவர் பெற்றோருடன் வசித்து வந்தார். அதேபோல நாமக்கல் கொசவம்பட்டி அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் முத்து (25). ஜோதிடம், குறி சொல்லும் வேலை பார்த்து வருகிறார். முத்து, வெள்ளையம்மாளின் தாய்மாமன் மகன் ஆவார்.
முத்து
இந்நிலையில் வெள்ளையம்மாளுக்கும், முத்துவிற்கும் காதல் ஏற்பட்டது. தொலைபேசியில் பழகி வந்த இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதலை வைத்து உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என வெள்ளையம்மாளிடம் கூறி கொஞ்சம் கொஞ்சமாக ரூ 1 லட்சத்து 20 ஆயிரம் பணம் மற்றும் 16 பவுன் நகைகளை வாங்கியுள்ளார்.
இழுத்தடிப்பு
இந்த பணம், நகைகள் முத்துவிடம் கொடுத்தது பெற்றோர்களுக்கு தெரியவர திரும்பி வாங்கும்படி வெள்ளையம்மாளிடம் பெற்றோர் கூறியுள்ளனர். இது குறித்து வெள்ளையம்மா முத்துவிடம் கேட்டதற்கு பணம் நகைகளை கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார்.
பெற்றோர்
தனக்கு மேலும் ரூ 1 லட்சம் கடன் உள்ளது. அதை கொடுத்துவிட்டால் நாம் எங்காவது போய் திருமணம் செய்து கொள்ளலாம். எனவே மேலும் கொஞ்சம் நகைகளை வீட்டிலிருந்து கொண்டு வா என வெள்ளையம்மாளிடம் முத்து கூறியுள்ளார். இதை நம்பிய வெள்ளையம்மாள் வீட்டில் இருந்த ஏழரை பவுன் நகைகளை எடுத்துக் கொண்டு "முத்துவிடம் பணம், நகைகளை வாங்க நாமக்கல் செல்கிறேன்" என பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.
கொலை செய்ய முடிவு
வாங்கிய பணம், நகைகளை திருப்பித் தரவேண்டும் வெள்ளையம்மாவையும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என பல நெருக்கடிகள் முத்துவிற்கு இருந்ததால் வெள்ளையம்மாளை கொலை செய்ய முடிவு செய்தார்.
கொலை
பின்னர் கடந்த 10 ந்தேதி வெள்ளையம்மாளை அழைத்து கொண்டு திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே துடையூர் பகுதிக்கு வந்தார். அப்போது கொள்ளிடம் ஆற்றின் கரையில் வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்து புதைத்து விட்டு தப்பியுள்ளார்.
ஒப்பு கொண்ட முத்து
வெள்ளையம்மாளை காணவில்லை என அவரது தந்தை திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் வெள்ளையம்மாள் கைப்பேசியை ஆய்வு செய்ததில் முத்து அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியது தெரிய வந்தது. பின்னர் முத்துவை பிடித்து விசாரித்ததில் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
மறியல்
இந்நிலையில் கொலையான பெண்ணின் உடல் புதைக்கப்பட்ட இடம் தெரிந்து 22 மணி நேரமாகியும் உடற்கூறு ஆய்வு செய்ய அரசு மருத்துவர் வராததால் உடலை தோண்டும் பணி தாமதமானது. இதை கண்டித்து திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.