பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமதிப்புக்கு கண்டனம்- திருச்சி, கோவை,நெல்லையில் வெடித்த போராட்டம்
திருச்சி: திருச்சியில் தந்தை பெரியார் சிலை மீது காவி பெயிண்ட் ஊற்றப்பட்டு, செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு அமைப்பினர் திருச்சி, கோவை மற்றும் நெல்லையில் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டத்திற்குள்பட்ட மணிகண்டம் ஒன்றியம், இனாம்குளத்தூர் ஊராட்சியில், பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. இந்த பெரியார் சமத்துவபுரம் முன்பாக தந்தை பெரியாரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.
இன்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள், பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்டு இருப்பதையும், செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து மணிகண்டம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த மணிகண்டன் காவல்துறையினர் பெரியார் சிலை மீது பூசப்பட்டு இருந்த காவி சாயத்தை துடைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதேபோல செருப்பு மாலையும் உடனடியாக அகற்றப்பட்டது.
பெரியார் சிலை அவமதிப்பு-மேலும் மேலும் புறக்கணிக்கப்படுவோம் என்பதை எப்போது புரிந்து கொள்வர்? ஸ்டாலின்
நெடுஞ்சாலையில் மறியல்
மேடை உடன் கூடிய இந்த வெண்கல சிலையின் தலைமீது காவி சாயம் ஊற்றப்பட்டு, அந்த காவி சாயம் அவரது மார்பு வழியாக வழிந்தோடி, கல்வெட்டுகளிலும் உள்ளது. எனவே, நடு இரவில் யாரோ மர்ம நபர்கள் யாருக்கும் தெரியாமல் அவசர அவசரமாக இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், இந்த அவமதிப்புக்கு காரணமான உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்யக்கோரியும் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி திராவிடர் கழகம், கம்யூனிஸ்ட் கட்சியினர், பெரியார் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் குவிப்பு
தேசிய நெடுஞ்சாலை அருகே இருப்பதால் அங்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது. அந்த சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை கொண்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவமானது நடு இரவுவில் நடைபெற்றிருக்க வேண்டும் என தெரிகிறது. பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்டு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு சம்பவம் காட்டுத்தீ போல அந்த பகுதியில் பரவி வருகிறது. எனவே பதற்றமான சூழ்நிலையை தவிர்க்கும் பொருட்டு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அந்த பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- ஓபிஎஸ்
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சமுக விரோதிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துளார். மேலு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
போலீஸ் விசாரணை
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன், திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜெயராமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக பெரியார் சிலை அவமதிக்கப்பட்டு தொடந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
கோவை, நெல்லையில் போராட்டம்
இச்சம்பவத்தைக் கண்டித்து பெரியார் ஆதரவாளர் கோவை மற்றும் நெல்லையில் போராட்டம் நடத்தினர். மேலும் கோவை காந்திபுரம் பகுதியிலுள்ள, பெரியார் திராவிடர் கழக தலைமை அலுவலகத்தின் முன்பு உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோல் நெல்லையிலும் போராட்டம் நடைபெற்றது.