கரோனாவை விட தினம் தினம் மக்களை வறுமை கொன்று வருகிறது: ஜோதிமணி எம்.பி
திருச்சி: தமிழக அரசு அளித்துள்ள 1000 ரூபாயில் சிலிண்டருக்கு ரூ850 போக மீதியுள்ள 150-யை வைத்து குடும்பம் நடத்த முடியுமா என்றும் கொரோனாவைவிட தினம் தினம் மக்களை வறுமை கொன்று வருகிறது என்றும் கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் மருங்காபுரி பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கீழையூர் காலனி மற்றும் கீரணிப்பட்டி ஆகிய பகுதிகளில் ஜோதிமணி பார்வையிட்டார். அப்போது அப்பகுதி மக்களுக்கு அரிசி, மளிகை பொருள்கள், காய்கனிகள் உள்ளிட்ட நிவாரண தொகுப்பினை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு ஜோதிமணி அளித்த பேட்டி: ஒவ்வொரு இடங்களிலும் மக்கள் பசியிலும், வறுமையிலும் வாடிவருவது மனம் வெடித்து விடுவது போல் உள்ளது. தமிழக அரசு அளித்துள்ள 1000 ரூபாயில் சிலிண்டருக்கு 850 போக மீதியுள்ள 150-யை வைத்து குடும்பம் நடத்த முடியுமா என்பது தெரியவில்லை.
பால், மருந்து வாங்க பணம் இல்லாமல் மக்கள் வறுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். கரோனாவை விட தினம் தினம் மக்களை வறுமை கொன்று வருகிறது. அரசு மக்களிடம் அன்பும், கருணையுடனும் இருக்க வேண்டும் என்றும், உண்மையில் மக்கள் மீதும், பொருளாதார மீட்டெடுப்பதில் அக்கறைக் கொண்ட அரசாக இருந்தால், ஏழை எளிய, விவசாய மக்களின் வங்கி கணக்கில் மாதம் ரூ7500 வீதம் மூன்று மாதத்திற்கான தொகையை செலுத்த வேண்டும்.
நாளை தற்காலிக சந்தைகள் இயங்காது.. இன்று இரவே காய்கறி விற்பனை.. திருச்சி ஆட்சியர் அதிரடி!
மாநில அரசுக்கு அளிக்க வேண்டிய நிலுவை தொகையை - ஜி.எஸ்.டி உள்ளிட்ட தொகையை கொடுக்க வேண்டும். ரூபாய் 2 லட்சம் கோடி தொகை பாக்கி உள்ளது. மோடி அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு துரோகம் விழைவித்து வருகிறது. மத்திய அரசு பிரதம மந்திரி நிவாரண நிதியை விட்டுவிட்டு பி.எம். கேர் தொடங்கி நூதனமான ஊழலில் ஈடுபட்டுள்ளது. கொரோ கொன்று விடுவதைவிட அரசு கொன்றுவிடும் என்ற பயம் மக்களிடம் இருந்து வருகிறது இவ்வாறு ஜோதிமணி எம்.பி. கூறினார்.