அண்ணியாரே... அமைச்சர் உருக.. வெற்றி தேடி தரும் அதிமுகவே.. பிரேமலதா பாராட்ட.. ஆஹா கூட்டம்!
அதிமுக-தேமுதிக கூட்டணி வெற்றி பெறும் என திருச்சி கூட்டத்தில் பிரேமலதா உரையாற்றினார்.
திருச்சி: "அம்மாவுக்கு பிறகு எங்களுக்கு அண்ணியார்தான்" என அமைச்சர் பிரேமலதாவுக்கு ஐஸ் வைக்க... "நம்பி வந்தவர்களுக்கு துணை நின்று அவர்களை வெற்றி பெற வைப்பவர்கள் அதிமுகவினர் " என பிரேமலதா பதிலுக்கு போட்டு தாக்க.. திருச்சி தொகுதியில் நேற்று ஒரே உற்சாகம் கரை புரண்டு ஓடியது.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் திருச்சி மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, ப.குமார் எம்பி, பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அம்மாவிற்கு பிறகு எங்களுக்கு கிடைத்திருக்கும் நம்பிக்கை அண்ணியார்தான். கூட்டணிப் பேச்சுவார்த்தை ஆரம்பித்தபோதே, தேமுதிக வேறு எந்த கட்சியுடனும் போகாது என்று நம்பிக்கையோடு இருந்தோம்.
ராகுல் வாயில் விஷத்தை ஊற்றணும்.. இருந்தால் சிவனின் அவதாரம்... குஜராத் அமைச்சர் விஷமப் பேச்சு
இயற்கையான கூட்டணி
கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றதைப் போலவே இப்போதும் தேமுதிக எங்களுடன் இணைந்துள்ளது. இது இயற்கையான கூட்டணி. அம்மா இறந்ததற்கும், கேப்டன் உடல் நலன் சரியில்லாமல் போனதற்கும் காரணமே இந்த திமுகதான். நம் எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்தி தேர்தலில் வெற்றி பெறுவோம்" என்றார்.
ஒரே மாதிரி சேலை
இதையடுத்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், "அதிமுக-தேமுதிக.. இந்த இரு கட்சிகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கு. 2 கட்சிகளின் பெயரிலுமே 4 எழுத்து, 2 கட்சிகளின், கரைவேட்டிக்கும் வித்தியாசம் இல்லை. இரண்டு கட்சிகளின் மகளிரணி கட்டும் சேலைகளுக்கும் வித்தியாசமும் இல்லை.
பக்தி கொண்டவர்கள்
எம்ஜிஆர் ஜெயலலிதா, விஜயகாந்த் 3 பேருமே சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து வெற்றி பெற்றவர்கள். இவங்க 3 பேரும் சாதாரணமானவர்களைகூட மிகப்பெரும் வல்லமை பெற்றவர்களாக மாற்றியவர்கள். கூட்டணியில் இருப்பவர்கள் அதிக பக்தி கொண்டவர்கள்.
கொல்லைப்புறம்
எதிரணியில் இருப்பவர்கள் பக்தி இல்லை என்பார்கள். ஆனால் கொல்லைப்புறம் வழியாக சென்று கடவுள்களை வணங்குவார்கள். இந்த கூட்டணி மே மாதம் வரும் உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும். நம்பி வந்தவர்களுக்கு துணை நின்று அவர்களை வெற்றி பெற வைப்பவர்கள் அதிமுகவினர்" என்றார்.