சூரியூரில் ஜல்லிக்கட்டுக்கான ஆயத்த பணிகள் தீவிரம்... காளைகளுக்கு முரட்டு பயிற்சி
திருச்சி: திருச்சி மாவட்டம் சூரியூரில் மாட்டுப்பொங்கல் அன்று நடத்தப்படும் ஜல்லிக்கட்டுக்கான ஆயத்த பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு நடத்தப்படும். ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையால் 5 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை.
இதனையடுத்து, கடந்தாண்டு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து ஜல்லிக்கட்டு ஊரின் பொது மந்தையில் நடத்தப்பட்டது.
வேறு இடத்திற்கு மாற்றம்
ஆனால், தற்போது பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி வேறு ஒரு இடத்தில் ஜல்லிகட்டு நடத்த முடிவு செய்பட்டு உள்ளது. அதற்கான உத்தரவை ஊர் தெய்வமான "நற்கடல்குடி கருப்பண்ணசாமி" என்கிற தெய்வத்திடம் சூரியூர் பொதுமக்கள் உத்தரவு கேட்டனர். இதில் சூரியூர் அருகே உள்ள சங்கிலி கருப்பு பெரியகுளத்தில் நடத்த தெய்வ அருளால் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூஜையுடன் தொடங்கியது
அதன்படி, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஆயத்த பணிகள் நேற்று பூஜையுடன் தொடங்கியது. ஜல்லிக்கட்டை ஒட்டி, காளைகளை தயார் செய்யும் விதமாக ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மாட்டின் உரிமையாளர்கள் நீச்சல் பயிற்சி, மண்குத்தும் பயிற்சி போன்ற பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.
8 அடுக்கு கேலரிகள்
இது குறித்து சூரியூர் ஜல்லிக்கட்டு குழு நிர்வாகி ராஜா நிருபர்களிடம் கூறியதாவது: ஜல்லிக்கட்டுக்கான ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. பேரிகாடு மற்றும் மேடைகள் இரும்பு கம்பிகளால் அமைக்கப்படுகிறது. அதே போல் பார்வையாளர்கள் ஜல்லிக்கட்டை பாதுகாப்புடன் கண்டுகளிக்கும் விதத்தில் 8 அடுக்கு கேலரிகள் இரண்டு புறமும் தலா 100 அடி தூரத்திற்கு அமைக்கப்படும்.
பரிசு மழை
இதில், திருச்சி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களை சேர்ந்த 600 முதல் ஆயிரம் காளைகள் கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், மாடுபிடி வீரர்களும் 600 முதல் 700 பேர் வரை கலந்துகொள்வார்கள். இதில் வெற்றிப்பெறும் காளைகளுக்கும், காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் மோட்டார் சைக்கிள், பிரிட்ஜ், சைக்கிள், தங்ககாசு, வெள்ளிக்காசு உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
பாரம்பரிய முறையில் அழைப்பு
ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்களுக்கு டோக்கன் வழங்குவதற்கு பதிலாக காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் பாரம்பரிய முறையான வெற்றிலை, பாக்கு வைத்து, காளைகளை அழைக்கும் முறை கடைபிடிக்க இந்த ஆண்டு முதல் முடிவு செய்யப்பட்டுள்ளது.