தயங்காதீங்க.. "போலீஸ் உங்க நண்பன்தான்" தைரியமா புகார் கொடுங்க.. தெறிக்கவிட்ட திருச்சி டிஐஜி ஆனிவிஜயா
பெண் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருவோம் என்று திருச்சி டிஐஜி ஆனி விஜயா தெரிவித்துள்ளார்
திருச்சி: "யாரும் தயங்காதீங்க.. எப்ப வேணும்னாலும் தொடர்பு கொள்ளுங்கள்.. புகார்களை சொல்லுங்கள்.. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்குதான் முக்கியம்.. "காவல்துறை உங்கள் நண்பன்" என்பதற்கு ஏற்ற வகையில் தான் இனி எங்களது நடவடிக்கை இருக்கும்" என்று திருச்சி சரக டிஐஜியாக பொறுப்பேற்ற ஆனிவிஜயா தன் முதல் பேட்டியிலேயே தெறிக்க விட்டுள்ளார்.
திருச்சி சரக டிஐஜியாக பதவி வகித்த பாலகிருஷ்ணன் சென்னைக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டார். இதையடுத்து மதுரை சரக டிஐஜியாக இருந்த டாக்டர் ஆனிவிஜயா திருச்சி சரக டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து ஆனிவிஜயா டிஐஜி ஆபிசில் தன் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். அவருக்கு போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதையடுத்து டிஐஜி ஆனிவிஜயா செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது அவர் சொன்னதாவது: "இப்போதைக்கு கொரோனா காலகட்டம்... அதனால், போலீசார் - பொதுமக்களின் நல்லுறவு குறித்து தான் அதிக கவனம் செலுத்த உள்ளோம். எனவே உட்கோட்ட அளவில் அனைத்து போலீசாருக்கும் பொதுமக்களை நட்புடன் கையாள்வது எப்படி? என்பது குறித்த மேலாண்மை பயிற்சி அளிக்க இருக்கிறோம்.
பொதுமக்களும் தயக்கமின்றி எந்நேரமும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து திருச்சி சரகத்தில் பணியாற்ற போகிறேன்.. "காவல்துறை உங்கள் நண்பன்" என்பதற்கு ஏற்ற வகையில் தான் எங்களது நடவடிக்கை இருக்கும். அதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் தேவை.
செவ்வாய் கிரகத்தின் மிகப் பெரிய நிலவு போபோஸ்.. சூப்பராக படம் எடுத்து அனுப்பிய மங்கள்யான்!
போலீசார் தினமும் பல தரப்பட்ட மக்களுடன் பழகி வருகிறார்கள். இதனால், அவர்களுக்கு மனஅழுத்தம் அதிகமாக இருக்கிறது. அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும். போலீசாருக்கும், மனதையும், உடலையும் பக்குவப்படுத்தும் வகையில், யோகா, நிர்வாகம், தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. போலீசாருக்கு மன அழுத்தம் அதிகம் இருக்கலாம். அதை நிர்வகிக்கும் திறனையும், பக்குவத்தையும் மேம்படுத்த பயிற்சி அளிக்கப்படும்" என்றார்.
சாத்தான்குளத்தில் ஒருசிலர் செய்த அக்கிரமத்தினால், பொதுமக்கள் போலீசார் மீது வருத்தத்திலும், கோபத்திலும் உள்ளனர்.. இந்நிலையில் இந்த நெகட்டிவ் எண்ணங்களை உடைக்கும் விதமாக ஆனி விஜயாவின் பேச்சு அமைந்துள்ளது.. நாங்க எல்லாம் அப்படிப்பட்டவங்க இல்லை என்பது போல ஆனிவிஜயாவின் பேச்சு இருப்பதுடன், திருச்சிக்கே நம்பிக்கை தரும்விதமாக அவரது பேச்சு திருப்தி தந்துள்ளது!!