எச். ராஜா உருவ பொம்மையை எரிக்க முயன்ற விசிக.. தூக்கி கொண்டு ஓடிய போலீஸ்.. திருச்சியில் பரபரப்பு
எச்.ராஜாவை கண்டித்து திருச்சியில் விசிக சாலைமறியலில் ஈடுபட்டனர்.
Recommended Video
திருச்சி: எச்.ராஜாவின் உருவ பொம்மையை கெட்டியாக பிடித்துகொண்டு நடுரோட்டில் போலீசார் ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை இழிவுபடுத்தும் விதமாக பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா பேசியதாக கூறி அக்கட்சியினர் பல்வேறு வகையில் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.
தலித் அல்லாத சமூகத்தினரை காயப்படுத்தும் வகையில் எச்.ராஜா பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று கூறி அவருக்கு எதிரான போராட்டங்களையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முன்னெடுத்து வருகின்றனர்.
சமூக பதற்றம்
அதன்படி இன்று திருச்சியிலும் எச்.ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சமூகப்பதற்றத்தை உருவாக்கியுள்ள பாஜக தேசியச் செயலாளர் எச்.ராசாவை கண்டித்தும், அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
எச்.ராஜா உருவ பொம்மை
மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகே திரண்ட அக்கட்சியினர் எச்.ராஜாக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினர். பின்னர் திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அப்போது அவர்களது கையில் எச்.ராஜா உருவபொம்மை இருந்தது.
தள்ளுமுள்ளு
அதனை எரிக்க முயன்றபோது, அதற்குள் போலீசார் விரைந்து வந்துவிட்டனர். எச்.ராஜாவின் உருவ பொம்மையை போலீசார் பறிக்க முயன்றபோது, போராட்டக்காரர்களுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பெரும் பரபரப்பு
இதையடுத்து, போலீசார் உருவபொம்மையை பறித்ததுடன், அதை எடுத்து கொண்டு நடுரோட்டில் ஓடினார்கள். உடனே விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் போலீசாரை துரத்த ஆரம்பித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கைது செய்தனர்
எப்படியோ, கடைசியில் எச்.ராஜா உருவபொம்மையை போலீசார் காப்பாற்றியதுடன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் கைது செய்தனர்.