திருச்சியில் பெண்களுக்கு எதிராக தொடரும் குற்றங்கள் - நடவடிக்கை எடுக்க ரேஸ் குழு தொடக்கம்
பொதுமக்களின் தொலைபேசி மூலமான புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க திருச்சி சரக காவல் நிலையங்களில் ரேஸ் குழுவை டிஐஜி ஆனி விஜயா தொடங்கி வைத்தார்
திருச்சி: திருச்சி காவல் சரகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் நடைபெறும் குற்ற சம்பவங்கள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதற்காக காவல் நிலையங்கள் தோறும் ரேஸ் (RACE) என்ற குழு அமைக்கப்பட்டுள்ளது. காவல்நிலையங்களுக்கு நேரில் வந்துதான் பொதுமக்கள் தங்களது குறைகளை கூற வேண்டும் என்பது கிடையாது. பொதுமக்கள் செல்போனில் அழைத்தால் சிறப்புக் காவலர்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக வருவார்கள் என்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
ரேஸ் சிறப்பு குழுவில் ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் சுழற்சி முறையில் காவலர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருப்பார்கள். பிரச்சனை குறித்து பொதுமக்களிடம் இருந்து தகவல் கிடைத்தவுடன் இந்தக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுக்கு உதவுவதே இந்த ரேஸ் குழுவினரின் பணியாகும். ரேஸ் என்பதன் விரிவாக்கம் RACE ( Rapid Action for Community Emergency) ஆகும்.
இந்தியாவில் வேகமாக உயரும் கொரோனா.. 20 நாளில் 48 சதவீதம் உயர்வு.. ஒரே நாளில் 37 ஆயிரம் பேர் பாதிப்பு
திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ரேஸ் குழு செயல்பாட்டினை திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா நேற்று தொடக்கி வைத்தார். இந்த குழுவின் செயல்பாடு பற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஆனி விஜயா, மக்களின் பிரச்னைகளை விரைந்து தீர்க்கும் வகையில் 'ரேஸ்' என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பலர் தங்களது குறைகளை தொலைபேசி மூலம் கூறுகிறார்கள். பலர் அவசர உதவிக்காகவும் தொலைபேசி மூலம் அழைக்கிறார்கள். உடனடியாக பாதிக்கப்பட்ட மக்கள் இருக்குமிடத்தை விரைந்து சென்று அணுகி தீர்வு காண்பதற்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
திருச்சி காவல் சரகத்திற்கு உட்பட்ட திருச்சி மாவட்டம், புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் மொத்தம் 109 ரேஸ் குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தக் குழு 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்கும். காவல் நிலையங்களில் உள்ள அனைத்து காவலர்கள், அலுவலர்கள் தொலைபேசி எண்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோல், அந்தந்த மாவட்டத்தில் உள்ள முக்கிய சந்திப்புகளில் காவல்துறை அலுவலர்கள் தொலைபேசி எண்கள் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளன.
காவல்நிலையங்களுக்கு நேரில் வந்துதான் பொதுமக்கள் தங்களது குறைகளை கூற வேண்டும் என்பது கிடையாது. பொதுமக்கள் செல்போனில் அழைத்தால் நாங்கள் வந்து நிற்போம் என்பது தான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். பெண்கள் சார்ந்த புகார்கள், குடும்ப பிரச்சினைகள், அருகில் வசிப்பவர்கள் பிரச்சனை, வாய்த்தகராறு போன்ற பிரச்சனைகள் குறித்து அதிக அளவில் புகார்கள் வருகிறது. சில ரகசியத் தகவல்களும் எங்களுக்கு வருகிறது. அதனால் எத்தகைய தகவல்கள் தொலைபேசி மூலம் வந்தாலும் இந்தக் குழு உடனடியாக நடவடிக்கை எடுக்கும். இந்தக் குழுவுக்கு என்று இருசக்கர வாகனம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட முறையில் எனது செல்போன் எண்ணுக்கு அதிகளவில் புகார்கள் வருகின்றன. அந்தத் தகவலை நான் துணை கண்காணிப்பாளர் போன்ற அலுவலர்களுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்க சில நிமிடங்கள் தாமதமாகிறது. அதை தடுப்பதற்காக எனது செல்போனில் இருந்து அந்த புகார் அழைப்பு நேரடியாக சம்பந்தப்பட்ட அலுவலருக்கு டிரான்ஸ்பர் ஆகிவிடும்.
கடுமையான நடவடிக்கை, விரைந்து நடவடிக்கை, விரைந்த தீர்வு போன்றவைதான் இந்த திட்டத்தின் நோக்கம். பொதுமக்களுடன் எப்படி பேசவேண்டும், பழகவேண்டும் என்பது குறித்து காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பிரச்சினையை நிதானமாக கேட்டறிந்து கவனமாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. பொது மக்களின் பிரச்சினைகளை பொறுமையாக கேட்கும் தன்மையை காவலர்கள் ஏற்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று ஆனி விஜயா கூறியுள்ளார்.