ஏம்பா.. பல்லு தேய்க்கிற பேஸ்ட்டை கூட விட்டு வைக்க மாட்டீங்களா.. 6 பேரை அள்ளிய கஸ்டம்ஸ்!
கடத்தி வரப்பட்ட 1 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது
திருச்சி: என்னதான் டிசைன் டிசைனா தங்கம் கடத்தி வந்தாலும், நம் ஏர்போர்ட் அதிகாரிகள் கடத்தல்காரர்களை வளைச்சு வளைச்சு பிடித்து கைது செய்து வருகிறார்கள்.
எவ்வளவுதான் தமிழக ஏர்போர்ட்களில் அதிகாரிகள் படு கண்டிப்பாக இருந்தாலும், வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை கடத்துவது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.
அதிகாரிகளும் இவர்களை வளைச்சு வளைச்சு கைது செய்து, ஜெயிலில் அடைத்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
திருச்சி ஏர்போர்ட்
நேற்றுகூட தங்கம் கடத்தியவர்கள் திருச்சி ஏர்போர்ட்டில் வசமாக மாட்டி கொண்டுள்ளார்கள். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேத்து ராத்திரி 10 மணிக்கு ஏர் ஏசியா விமானம் திருச்சி ஏர்போர்ட் வந்தது. அதில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் வழக்கம்போல் சோதனை செய்தனர்.
6 பேர்
அப்போது 6 பேர் மீது மட்டும் பலமாக டவுட் வந்தது. அதனால் அவர்களிடம் சோதனையும் பலமானது. தூத்துக்குடியைச் சேர்ந்த நியாஸ், சென்னையை சேர்ந்த சல்மான்கான், ரியாஸ்கான், லியாக்கத் அலி, அமான்அலிகான் மற்றும் இளையான்குடியைச் சேர்ந்த ரசூலுதீன் ஆகியோர்தான் அந்த 6 பேர்.
தங்க துகள்கள்
இவர்கள் அணிந்திருந்த பேண்ட்களில் டூத் பேஸ்ட் இருந்தது. பேஸ்ட்டை எதுக்கு பேன்ட்டில் வைத்து வர வேண்டும் என்ற சந்தேகம் எழுந்ததால், தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போதுதான், அந்த பேஸ்ட்டில் தங்க துகள்களை கலந்து மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.
6 பேர் கைது
மொத்த எடை 2,430 கிராம் இருந்ததாம். அந்த பேஸ்ட்டில் இருந்து தங்கத்தை உருக்கி தனியாக பிரித்து எடுத்தார்கள். அந்த பேஸ்ட்கூட சங்கிலி வடிவிலும், கட்டி வடிவிலும் டிசைன் டிசைனாக இருந்ததாம். 1 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1,317 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து 6 பேரையும் அள்ளிக் கொண்டு போனார்கள்.