காரிலிருந்து குதித்து வந்த பெண்.. கடத்தப்பட்டதாக புருடா.. போலீஸ் கிடுக்குப்பிடி விசாரணை!
Recommended Video
திருச்சி : திருச்சியில் டிபன்கடை உரிமையாளரிடம் ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டி கடத்தல் நாடகமாடிய பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணை வீடு புகுந்து கடத்தி சென்றதாக கூறி திருச்சி டிபன்கடை உரிமையாளரிடம் ரூ.20 லட்சம் கேட்டு மர்மநபர்கள் மிரட்டினர். இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பெண்ணே கடத்தல் நாடகமாடியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
திருச்சி பெரியகடை வீதி அரபிக்குல தெருவை சேர்ந்தவர் மயில்வாகனன் (வயது 57). இவர், மலைக்கோட்டை சறுக்குப்பாறை ஆண்டாள் தெருவில் இரவு நேர டிபன் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கடந்த 3 ஆண்டுக்கும் மேலாக, அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண் வேலை பார்த்து வருகிறார்.
பெண் கடத்தல்
மயில்வாகனன் சமீபத்தில் வீடு ஒன்றை விற்பனை செய்தார். அதில் கிடைத்த பணத்தை அவர் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டிபன் கடையில் வேலை பார்த்துவந்த பெண், மயில்வாகனனிடம் செல்போனில் பேசினார். அப்போது, தன்னை வீடு புகுந்து சிலர் கடத்தி விட்டதாகவும், நீங்கள் ரூ.20 லட்சம் கொடுத்தால் தன்னை விடுவதாக கடத்தல் ஆசாமிகள் மிரட்டுவதாகவும், கூறினார். அப்போது உடன் இருந்த ஆசாமிகளில் ஒருவர், மயில்வாகனனிடம் ரூ.20 லட்சத்தை உடனடியாக எடுத்து வரவேண்டும், என்று பேசினார்.
பெண் மீட்பு
இதனால், பதற்றமும் அதிர்ச்சியும் அடைந்த மயில்வாகனன் உடனடியாக கோட்டை போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்தார். இந்தநிலையில் ‘தன்னை கடத்திய கும்பல் திருச்சி கல்லணை ரோட்டில் சென்றபோது, காரின் கதவை திறந்து கொண்டு கீழே குதித்து தப்பித்து விட்டேன்‘ என்று கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் செல்போனில் கூறியுள்ளார். பின்னர் போலீசார் கல்லணை ரோட்டிற்கு சென்று, அங்கு நின்ற அந்த பெண்ணை மீட்டு போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.
விசாரணையில் அம்பலம்
மேலும் போலீசார் கல்லணை ரோட்டில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த பெண் ஒரு காரில் இருந்து இறங்கி நடந்து வந்ததாகவும், காரில் இருந்து அவர் குதிக்கவில்லை என்பதும் தெரியவந்தது. அத்துடன் வீடு புகுந்து அவரை யாரும் கடத்தி சென்றதற்கான அறிகுறியும் அப்பகுதியில் தெரியவில்லை. எனவே, தனக்கு வேண்டிய சிலரை வைத்து கொண்டு, ஒரு காரை வாடகைக்கு அமர்த்தி டிபன்கடை உரிமையாளர் மயில்வாகனனிடம் இருக்கும் பணத்தை அபகரிக்கும் முயற்சியில் அந்த பெண் இந்த நாடகத்தை அரங்கேற்றியதும் தெரியவந்தது.
கடத்தல் நாடகம்
போலீசாரிடம் மயில்வாகனன் சென்று விட்டதை அறிந்ததும் கடத்தல் நாடகத்தை கைவிட்டு தப்பிவிட்டதாக கூறியதும், தெரியவந்தது. மேலும் அவரது நாடகத்துக்கு உடந்தையாக இருந்த நபர்கள் யார்? என்று, அந்த பெண்ணிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கடத்தல் நாடக சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.