சபரிமலை செல்ல முடியாத பக்தர்களே திருச்சி ஐயப்பன் கோவிலில் நெய் அபிஷேகம் செய்யலாம்
கொரோனா பொதுமுடக்கத்தால் சபரிமலைக்குச் செல்ல முடியாத பக்தா்கள் திருச்சி ஐயப்பன் கோயிலுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
திருச்சி: கொரோனா பொதுமுடக்கத்தால் சபரிமலைக்குச் செல்ல முடியாத பக்தா்கள் திருச்சி ஐயப்பன் கோயிலுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டவர்களும், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் உள்ளே செல்ல இயலாது நெய் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும் சமயத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்து உள்ளனர்.
சபரிமலையில் தினசரியும் ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். சனி ஞாயிறு கிழமைகளில் 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசன டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.மண்டல பூஜை காலத்திலும் குறைவான அளவு பக்தர்களே வருவதால் கோவிலுக்கு வருமானமும் குறைந்து விட்டது. பல பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல முடியவில்லையே என்ற கவலையில் இருக்கின்றனர். பல பக்தர்கள் உள்ளூரில் உள்ள ஐயப்பன் கோவிலில் இருமுடி செலுத்தி வருகின்றனர்.
சபரிமலை செல்ல முடியாத பக்தர்கள் திருச்சி ஐயப்பன் கோவிலுக்கு வரலாம் என்று ஐயப்ப சேவா சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக திருச்சி ஸ்ரீ ஐயப்ப சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கொரோனா ஊரடங்கு காரணமாக சபரி மலைக்கு இருமுடி கட்டி சென்று நெய் அபிஷேகம் செய்ய இயலாதவர்கள் திருச்சிராப்பள்ளி கண்டோன்மென்ட் கோர்ட் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்பன் கோவிலுக்கு வந்து நெய் அபிஷேகத்துக்கு கொடுத்து அபிஷேக நெய், விபூதி பிரசாதம் பெற்றுக்கொள்ளலாம்.
காலை மணி 07:10 முதல் 10:00 மணி வரை. மாலை மணி 06:00 முதல் 08:00 மணி வரை, தரிசன நேரம். இருமுடியிலிருந்து சேகரித்த நெய்யும் தனியாக பக்தர்கள் கொடுக்கும் நெய்யும் பகவான் ஸ்ரீ ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்து நெய் பிரசாதமாக வழங்கப்படும். அரசாங்கம் அறிவித்துள்ள வழிகாட்டுதலைப் பின்பற்றி பக்தர்கள் சமூக இடைவெளி கடைப்பிடித்தலும், முகக்கவசம் அணிதலும் மிக அவசியம்.
65 வயதுக்கு மேற்பட்டவர்களும், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் உள்ளே செல்ல இயலாது நெய் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும் சமயத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்து உள்ளனர்.