சாத்தான்குளம் துயர சம்பவம் : பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு பல மாவட்டங்களில் தடை
சாத்தான்குளம் விவகாரத்தில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அத்துமீறி செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி: சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினருக்கும் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. அந்த அமைப்பினரை விசாரிக்க வேண்டும், மாநிலம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினரை தடை செய்ய வேண்டும் என்ற குரல் வலுவடைந்து வருகிறது. இந்த நிலையில் திருச்சி, கரூர், புதுக்கோட்டை அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. சமூக பணிகளில் மட்டும் ஈடுபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் தொடர்புடைய இன்ஸ்பெக்டர், எஸ் ஐ உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் சில பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களையும் கைது செய்து தீவிர விசாரணை செய்து தகுந்த தண்டனை அளிக்க வேண்டும் என்ற குரல் வலுவடைந்துள்ளது.
பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்கிற அமைப்பையும், சேவா பாரதி என்கிற அமைப்பையும் மொத்தமாக தடைசெய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை வலியுறுத்தி போராட்டமும் நடைபெற்றது.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் காவல் பணியில் ஈடுபட பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட எஸ்பி ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியுள்ளார்கள். சமூகப் பணிகளுக்கு மட்டுமே பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பயன்படுத்தபடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் இதயத்தையே புரட்டி போட்ட சாத்தான்குளம் வழக்கு.. அடுத்து விசாரிக்க போகும் நீதிபதி யார்?
இதே போல பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டங்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா உத்தரவிட்டுள்ளார். ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் காவல் நிலையத்திற்குள் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை அனுமதித்தால் சம்பந்தப்பட்ட போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருச்சி சரக டிஐஜி தெரிவித்துள்ளார். பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழு சமூக பணிகளில் தொடர தடையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல பல மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு செயல்பட தடை விதிக்கப்பட்டு வாய்மொழியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினர், இந்த லாக்டவுன் காலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கையில் லத்தியுடன் பொதுமக்களை தாக்கும் சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் காவல்துறைக்கு நண்பன் என்ற பெயரில் பொதுமக்களுக்கு எதிரியாக மாறிக் கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அந்த அமைப்பை பல மாவட்டங்களில் தடை செய்துள்ளதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.