"பீரியட்ஸ்" டைமில் லீவு போடுகிறோம்.. பாத்ரூம் போக முடியல சார்.. மாணவிகள் வேதனை.. திருச்சியில் கொடுமை
மாணவிகளுக்கு கழிப்பறை கட்டி தந்த பள்ளி ஆசிரியருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன
திருச்சி: "பாத்ரூம் போக முடியல சார்.. எங்களுக்கு உடம்பு கெட்டு போகுது.. பீரியட்ஸ் டைமில் நாங்கள் லீவு போடுகிறோம்" என்று மாணவிகள் சொன்னதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றார் ஆசிரியர் செந்தில்குமார்!
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவிகளுக்கு பாத்ரூம் வசதி இல்லை.. இதனால், மாணவிகள் அதிகம் கஷ்டப்பட்டனர். குறிப்பாக மாதவிடாய் காலங்களில் இந்த சிரமம் அதிகமாக இருந்தது.. பாத்ரூம் கதவுகள் இல்லாதது மிகப்பெரிய அவதியை தந்தது.
அதனால் அந்த மாதிரி பீரியட் சமயங்களில் ஸ்கூலுக்கு போறதைவிட லீவு எடுப்பதே மேல் என்று விடுப்புகளை போட்டு வந்தனர்... இதனால் படிப்பும் கெட்டு போனது!
சிரமம்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த ஸ்கூலில் படிக்கும் 2 மாணவிகள் பக்கத்தில் உள்ள வங்கியின் பெண் ஊழியரிடம் தங்கள் சிரமத்தை சொன்னார்கள்.. வங்கி கழிப்பிடத்தை பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கும்படி கெஞ்சி கேட்டனர். ஆனால் அந்த ஊழியர் அதற்கு அனுமதி தரவே இல்லை.. தொடர்ந்து மாணவிகள் வற்புறுத்தி கேட்டு கொண்டே இருந்தனர்.
ஏன் இங்க நிக்கறீங்க?
அந்த சமயத்தில்தான், அந்த ஸ்கூலின் அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார் வந்தார்.. "ஏன் கிளாசுக்கு போகாம, பேங்க் முன்னாடி நிக்கறீங்க" என்று கேட்டதும், வேறு வழியின்றி மாணவிகள் தங்கள் அவதியை தயங்கியபடியே சொன்னார்கள். இதை கேட்டதும் ஆசிரியர் செந்தில்குமார் அதிர்ச்சி அடைந்தார். நம்ம ஸ்கூலிலேயே இப்படி ஒரு நிலைமை இருப்பது இதுநாள் வரை தெரியாமல் போய்விட்டதே என்று வருத்தப்பட்டார்.
பீரியட்ஸ் டைம்
"காலையில் பாத்ரூம் சென்றுவிட்டு, வீட்டை விட்டு கிளம்பி ஸ்கூலுக்கு வந்தால், வீட்டில் ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு சென்றுதான் பாத்ரூம் செல்ல முடிகிறது, இதனால் எங்களுக்கு உடம்பு கெட்டு போய்விடுகிறது.. பீரியட்ஸ் டைமில் நாங்கள் லீவு போடுகிறோம்" என்று மாணவிகள் சொன்னதை கேட்டு கலங்கிவிட்டார்.
காரியம்
பின்னர் செந்தில்குமார், இதற்கெல்லாம் அரசிடம் போகாமல், தாமே முன்னிறங்கி காரியத்தை செய்ய வேண்டியதுதான் என்று முடிவெடுத்தார். பொதுமக்களின் உதவியை பெறுவதற்கு முன்பு, தனக்கு 2018-ம் வருஷம் சிறந்த ஆசிரியருக்காக வழங்கப்பட்ட ரூ.50 ஆயிரம் நிதியை இதற்கு ஒதுக்கினார். இதன்பிறகு பொது மக்களிடம் நிதியை திரட்டினார்.. இந்த விஷயம், சோஷியல் மீடியாவில் பரவ ஆரம்பித்தது.. நல்ல உள்ளங்கள் மனமுவந்து உதவிகளை செய்ய ஆரம்பித்தனர்..
கழிப்பறை
820 சதுர அடியில் ரூ.10.5 லட்சம் மதிப்பில் மாணவிகளுக்காக 14 கழிப்பறைகளும், பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகளுக்கு 4 கழிப்பறையும், மாற்றுத்திறனாளி மாணவிகளுக்கு ஒரு கழிப்பறையும் என மொத்தம் 19 கழிப்பறைகளுடன் கூடிய நவீன கழிப்பிட கட்டிடம் கட்டும் பணி கடந்த ஜனவரி மாதம் பள்ளி வளாகத்தில் தொடங்கியது.
இடையூறுகள்
போன மாதம் இந்த பணி முடிவடைந்த நிலையில், பணம் தந்து உதவிய பொதுமக்கள் முன்னிலையிலேயே இந்த நவீன கழிப்பிடம் திறக்கப்பட்டது. இப்படி கழிவறைகளை கட்டி முடிக்க செந்தில்குமார் பட்ட பாடு கொஞ்சமல்ல.. ஏராளமான இடையூறுகள் வந்தன.. சிலர் அவர் மிரட்டினர்.. கட்டிட பொருட்களை களவாடவும் செய்தனர்.. அதையும் மீறிதான் செந்தில்குமார் இதை கட்டி முடித்தார்.
தங்கள் கஷ்டத்தை பல நாள் சொல்ல முடியாமல் தவித்து வந்த மாணவிகளின் கண்ணில் இப்போது ஒரு நிம்மதி பிரகாசமாக பளிச்சென மின்னுவதை காண முடிகிறது.