போர் வந்தால் பார்த்துக்கலாம்னு சொன்னாரே ரஜினி.. இப்ப எல்லைக்கு போகலாமே.. சீமான் நக்கல்
நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை குறித்து நாம் தமிழர் கட்சி சீமான் பதிலடி தந்துள்ளார்.
Recommended Video
திருச்சி: "போர் வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என ரஜினி சொன்னாரே, இப்போது எல்லையில் போர் வருகிற சூழல் ஏற்பட்டுள்ளது. முதலில் ரஜினிகாந்த் அங்கு செல்லட்டும்.. சட்டமன்றத் தேர்தலில் என்ன செய்வாரென பிறகு பார்ப்போம்" என்று ரஜினிகாந்த் அறிக்கைக்கு சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
ரஜினியின் அரசியல் செயல்பாடுகள் குறித்து ஆரம்பத்திலிருந்தே மிகக் கடுமையான வார்த்தைகளில் விமர்சித்து வருபவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இன்னும் சொல்லப்போனால் ரஜினி அரசியலுக்கு வருவதையே எதிர்க்கிறேன் என்று பகிரங்கமாக சொன்னவர்.
இந்நிலையில் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும், தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைப்பவர்களுக்கே வாக்களியுங்கள் என்றும் கூறி ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றினை நேற்று வெளியிட்டார்.
சீமான் பேட்டி
இது குறித்து கருத்து கேட்ட செய்தியாளர்களிடம் திருச்சியில் சீமான் சொன்னதாவது: "ரஜினியிடம் இது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கும் ஒரு தலைவர் அவரது ஆதரவாளர்கள் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பதையும் சொல்லவேண்டும்.
பொறுப்பில்லாத பேச்சு
அதுதான் ஒரு தலைவனுக்கு அழகு. அதை விட்டுவிட்டு யாரு நல்லவரோ யாரு தண்ணீர்ப் பிரச்சினையை தீர்த்து வைப்பார்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள் என்று பொறுப்பில்லாமல் பேசுகிறார்.
தொண்டர்கள்
தண்ணீர் பிரச்சினையை யார் தீர்ப்பார்கள் என்று ரஜினிகாந்த்தான் தொண்டர்களுக்கு சொல்ல வேண்டும். தொண்டர்களே ஆராய்வதற்கு தலைவன் எதற்கு?. தலைவன்தான் தொண்டர்களுக்கு வழிகாட்ட வேண்டும். ஆனால் அந்த வழி இல்லாதது ஒரு கேள்வியாக எழுகிறது.
போர் வரட்டும்
சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் போட்டியிடட்டும். அப்போது அவர் வந்து தீர்ப்பாரா? என்று பார்ப்போம். போர் வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்றார். தற்போது எல்லையில் போர் வருகிற சூழல் ஏற்பட்டுள்ளது. அங்கு ரஜினிகாந்த் செல்லட்டும்.