சரியா விடுதலையாகும் நேரத்தில் எப்படி.. சந்தேகமாக இருக்கிறது.. சசிகலா உடல்நிலை பற்றி சீமான் கேள்வி
திருச்சி: பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா விரைவில் விடுதலையாக உள்ள நிலையில், உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதன் பின்னணியில் சந்தேகங்கள் இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு வருடங்கள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் இருந்து வரும் 27ம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது.
Recommended Video
ஆனால் கடந்த சில தினங்கள் முன்பு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், பெங்களூரிலுள்ள பவுரிங் மற்றும் அதைத் தொடர்ந்து விக்டோரியா ஆகிய அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
சசிகலாவுக்கு கொரோனா
விக்டோரியா மருத்துவமனையில் எடுத்த சிடி ஸ்கேன் ரிப்போர்ட்டை வைத்து பார்க்கும்போது, சசிகலாவுக்கு கொரோனா இருப்பதாக தெரியவந்துள்ளது. நுரையீரலில் கடும் நோய்த் தொற்று இருக்கிறது. எனவே, சசிகலாவுக்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில்தான் சீமான் ஒரு சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.
35 வேட்பாளர்கள்
சட்டசபைத் தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் சார்பில், தஞ்சை, திருச்சி, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் போட்டியிடும் 35 வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சீமான், வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அப்போது வேட்பாளர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
அரிசி இருக்காது
பின்னர் உரையாற்றிய சீமான் கூறியதாவது: எதிர்கால மக்கள் உயிர்களைக் காப்பதற்காக, டெல்லியில் நடக்கும் போராட்டத்தைபோல சென்னையில் போராட்டம் நடக்க உள்ளது. உணவு மானியத்தை ரத்து செய்து இலவச அரிசியை இல்லாமல் செய்வதற்காகவே, இந்திய அரசு வேளாண் சட்டம் கொண்டு வந்திருக்கிறது என்றார்.
திடீர் உடல்நலக்குறைவு
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், சசிகலா விடுதலையாக உள்ள நிலையில், திடீரென உடல்நலக்குறைவு ஏற்படுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றார். இத்தனை நாட்களாக இல்லாமல் விடுதலையாகும் நேரத்தில் சசிகலாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார் சீமான்.