திருச்சி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை.. எஸ்பி எச்சரிக்கை
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக் எச்சரித்துள்ளார்.
Recommended Video
இதுகுறித்து திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில கூறியதாவது: ஊரடங்கு அமலாக்கப்பட்ட நிலையில், முதல் முறையாக திருச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் டிரோன் கேமராக்கள் மூலம் தடை உத்தரவுகளை மீறுபவா்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.
திருச்சி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 685 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும் 462 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 69 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை நடத்திய வாகனத் தணிக்கையின் போது, அத்தியாவசியத் தேவை இல்லாமல் சாலைகளில் விதிகளை மீறிச் சென்றதாக 1,508 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கொரோனாவைரஸ் குறித்து வீண் வதந்திகளைப் பரப்பியதாக 2வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கொரோனாவைரஸ் அறிகுறி காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவா்கள் என அறிவிக்கப்பட்ட பிறகும், வெளியே நடமாடிய 3 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. அவா்களின் கடவுச்சீட்டு முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனாவைரஸ் தொற்று குறித்து மாவட்டத்தில் அனைத்துக் கிராமங்களிலும் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தேநீரகங்களில் மக்கள் அதிகம் கூடுவதால், நோய்த் தொற்று அபாயம் கருதி அக்கடைகள் மூடப்பட்டுள்ளன. எனினும் தடையை மீறி திறக்கப்பட்ட கடைகளுக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்துள்ளார்.