தமிழில் தந்தி அனுப்புவதை கண்டுபிடித்தவர் மரணம்... மருத்துவ கல்லூரிக்கு உடல் தானம்
திருச்சி: தமிழில் தந்தி அடிக்கும் முறையை கண்டுபிடித்த அஞ்சல் துறை அலுவலர் சிவலிங்கனார் மரணமடைந்தார். அவருக்கு வயது 94.
தபால் அதிகாரியின் உடல் திருச்சி அரசு மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.
நவீன தொழில்நுட்ப வசதிகள் வரும் முன், தபால் துறையில் தந்தி என்பது மட்டுமே அவசர செய்திகளை, நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு செல்லும் சாதனமாக இருந்தது. அதில், 'மோர்ஸ்' குறியீடை பயன்படுத்தி, ஆங்கிலத்தில் மட்டுமே பதிவு செய்ய முடியும் நிலை இருந்தது.
விருதுகள்
இந்நிலையில், 1944-ம் ஆண்டு தபால் துறையில் எழுத்தராக பணியில் சேர்ந்த விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சிவலிங்கனார், 1955ல், 'மோர்ஸ்' குறியீட்டிலேயே தமிழில் தந்திஅனுப்பும் முறையை கண்டுபிடித்தார். இவரது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிடைத்தாலும், அதை அஞ்சல் துறை, பல்வேறு பிரச்னைகளால் அமல்படுத்தவில்லை. ஆயினும்,சிவலிங்கனாரின் கண்டுபிடிப்பை பாராட்டி, தமிழக அரசும், பல்வேறு தரப்பினரும் பாராட்டுகள், பரிசுகள் வழங்கி கவுரவித்துள்ளனர்.
எழுத்தர்
பணி ஓய்வுக்கு பின்னர் திருக்குறளுக்கு விளக்கம் உள்பட பல புத்தகங்களை எழுதி உள்ள புலவர் சிவலிங்கம், வயது முதிர்வின் காரணமாக தனது 94 வயதில் நேற்று மரணம் அடைந்தார்.
மகனின் பெயர் 'மோர்ஸ்'
தந்தி அனுப்புதல் மீது இவருக்கு இருந்த தணியாத தாகத்தால், தன் இரண்டாவது மகனுக்கு மோர்ஸ் என பெயர் வைத்தார். இவரது மனைவி, சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவருக்கு தமிழ்செல்வன், 70, மோர்ஸ், 62, மனோன்மதி, 60, என்ற மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
உடல்தானம்
இறந்த பிறகு தனது உடலை மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சி படிப்புக்காக தானமாக வழங்க வேண்டும் என்று சிவலிங்கம் உறுதி அளித்து இருந்தார். அதன்படி நேற்று திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரிக்கு சிவலிங்கத்தின் உடல் தானமாக வழங்கப்பட்டது.