கமல் பற்றி பேச இதுதான் காரணமா... சீக்ரெட்டை உடைத்த சினேகன்
திருச்சி: கூட்டணி பேச்சு வார்த்தையில் மக்கள் நீதி மையம் கட்சி தீவிரம் காட்டி வருவதாகவும், சமூக வலைதளங்களில் வைரலாக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சியினரும், ஆளும் கட்சியினரும் கமல் பற்றி பேசுவதாகவும் அக்கட்சியின் இளைஞரணி மாநில செயலாளர் சினேகன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
மக்கள் நீதி மையம் கட்சியின் இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே உள்ள தனியார் விடுதி கூட்ட அரங்கில் நடைபெற்றது.. இக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சினேகன் பேசுகையில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை சந்திப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த தேர்தலில் வாக்காளர்களை பாதுகாக்க வேண்டும். வாக்குச்சாவடிகளை பாதுகாக்கவேண்டும். வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விரைவில் கமல் பிரசாரம்
10 நாட்களுக்கு ஒரு செயல் வடிவமைப்பை முன்னெடுத்துச் செல்ல இளைஞர் அணிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.தேர்தல் வரை இந்த செயல்முறை பயன்படுத்தப்படும். மக்கள் நீதி மையம் தலைவர் கமல் விரைவில் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். இதற்கான கள ஆய்வையும் இளைஞர் அணியினர் மேற்கொள்ள உள்ளனர்.
பெண்களிடம் கமலுக்கு வரவேற்பு
இந்த பிரச்சாரத்தை எழுச்சி மிக்க வகையில் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. கமல் மேற்கொண்ட முதல் கட்ட பிரச்சாரம் இளைஞரணியால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. இந்த பிரச்சாரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக பெண்கள், அதுவும் இளவயது பெண்கள், முதல்முறை வாக்காளர்கள் ஆகியோரிடம் கிடைத்த வரவேற்பு எங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இது தான் எதிர்கட்சிகளுக்கு பயத்தை ஏற்படுத்தி உள்ளது.
எங்களுக்கு நிறைய வேலையிருக்கு
சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக்குவதற்காக கமல் குறித்து ஆளும் கட்சியினரும், எதிர் கட்சியினரும் பேசுகின்றனர். இதற்கு பதில் அளிக்க விரும்பவில்லை.எங்களுக்கு தேர்தல் பணியும், மக்கள் பணியும் அதிகம் உள்ளது. கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடக்கிறது. நிறைய கட்சிகள் எங்களோடு பேச முன்வருகின்றன. குறிப்பாக எங்கள் கருத்துடன் ஒற்றுப் போகக் கூடிய கட்சிகள் நிறைய உள்ளது.
கூட்டணிக்கு அழைக்கும் கட்சிகள்
இத்தனை நாட்கள் வேறுவழியில்லாமல் மாறி மாறி ஆளும் கட்சியுடனும், ஆண்ட கட்சியுடனும் கூட்டணி வைத்து இருந்தனர். மாற்றத்தை விரும்பும் அவர்கள் எங்களை தேடி வருகிறார்கள். யார்?யார்? கூட்டணிக்கு வருகிறார்கள் என்பதை கமல் அறிவிப்பார்.எனினும் கூட்டணிக்கு கட்சிகள் வரும் என்று நம்பி நாங்கள் கட்சி ஆரம்பிக்கவில்லை.
கமல் தொடர்ந்து நடிப்பார்
முழுநேர அரசியல்வாதியாக இருந்தால் யாராலும் நேர்மையாக இருக்க முடியாது. அதனால் கமல் ஒரு புறம் அரசியலும் மற்றொரு புறம் நடிப்பிலும் ஈடுபடுகிறார். வாழ்க்கை வேறு, அரசியல் வேறு. இன்னும் 10 நாட்கள் ஓய்வுக்கு பின்னர் கமல் சகஜ வாழ்க்கைக்கு திரும்புவார் என்றார்.