கொரோனா வைரஸ்.. திருச்சியில் இருந்து செல்லும் விமான சேவைகளில் அதிரடி மாற்றம்.. சில சேவைகள் ரத்து
திருச்சி: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக திருச்சி-மலேசியா இடையே இயக்கப்பட்டு வரும் ஏா் ஏசியா விமானப் போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பயணிகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்ததையடுத்து திருச்சி -மலேசியா இடையே இயக்கப்பட்டு வரும் விமானங்களில் சில தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
Recommended Video
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலக நாடுகள் பலவற்றிலும் சுற்றுலா விசாக்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. மேலும், விமானப் போக்குவரத்தும் முடங்கியுள்ளன.இந்நிலையில், திருச்சி-மலேசியா இடையே இயக்கப்பட்டு வரும் ஏா் ஏசியா விமானப் போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தினமும் காலை திருச்சிக்கு 8.55 மணிக்கு வந்து 9.25 மணிக்கு செல்லும் விமானமும், நள்ளிரவு 11.40 மணிக்கு வந்து 12.10க்கு புறப்பட்டுச் செல்லும் விமானமும் மார்ச் 13 (வெள்ளிக்கிழமை) முதல் மார்ச் 17 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேறு தேதியில் புதிய சேவை தொடக்கம் : திருச்சி - அபுதாபி இடையே தொடங்கப்பட இருந்த ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானப் போக்குவரத்து வேறு தேதியில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி- அபுதாபி இடையே மார்ச் 29 ஆம் தேதி முதல் புதிய விமான சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக இந்த புதிய சேவை மே 15 ஆம் தேதி முதல் தொடங்கப்படும்.
திருச்சி -அபுதாபி இடையே பயணிக்க ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகள், அதற்கு பதிலாக, திருச்சி-துபை அல்லது திருச்சி- சார்ஜா செல்லும் விமானங்களில் கூடுதல் கட்டணமின்றி மீண்டும் பதிவு செய்யலாம். இதேபோல மார்ச் 29 ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட திருச்சி-தோஹா விமான சேவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ஆனால், திருச்சி- மதுரை - டெல்லி விமான சேவைகள் குறிப்பிட்டபடி மார்ச் 29 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் .திருச்சியிலிருந்து துபை, சார்ஜா மற்றும் சிங்கப்பூா் ஆகிய நாடுகளுக்கு தினசரி இடைவிடாத சேவைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.