'சாரி சுஜித் உன்னை எங்களால் காப்பாற்ற முடியவில்லை' மீளா துயரில் மக்கள் #RIPSujith
Recommended Video
திருச்சி: 'போர்வெல் குழியில் இருந்து உன்னை தூக்கிவிட்டோம்.. ஆனால் மீளா துயரில் வீழ்ந்து விட்டோம் என கண்ணீருடன் குழந்தை சுஜித் மரணத்திறக்காக பலரும் கண்ணீர் சிந்தி வருகிறார்கள். டுவிட்டரில் பலரும் தங்கள் வேதனையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
திருச்சி மாவட்டம் மாணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரிட்டோ ஆரோக்கியதாஸ் - கலாமேரி தம்பதியின் இரண்டாவது மகன் சுஜித். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் தனது தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். முதலில் 25 அடியில் தவறி விழுந்த குழந்தை, அடுத்ததாக 70 அடிக்கு சென்றுவிட்டான். அதன் பிறகு மீட்பு முயற்சியின் போது 80 அடிக்கு கீழ் சென்றுவிட்டான்.
குழந்தை சுஜித்தை மீட்க கடந்த ஐந்து நாட்களாக பல்வேறு கட்ட முயற்சிகள் நடந்தது. பொதுமக்கள் பலரும் ஒவ்வொரு நாள் விடியும் பொழுதும் சுஜித் நிச்சயம் மீட்கப்படுவான் என்ற நம்பிக்கையுடன் பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தனர்.
சுஜித் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது... மண்ணுலகில் இருந்து விடைபெற்ற பாலகன்
சுஜித் உயிரிழப்பு
தீபாவளி பண்டிகையை கூட பலரும் கொண்டாடவில்லை. குழந்தை சுஜித் எப்படியாவது உயிருடன் மீண்டுவந்துவிடுவான் என்று நம்பிக்கையுடன் இத்தனை நாட்களாக மக்கள் காத்துக்கொண்டிருந்தனர். இன்று அதிகாலை குழந்தை சுஜித் உயிரிழந்துவிட்டான் என வருவாய்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
சுஜித் உடல்மீட்பு
அதன்பிறகு குழந்தை சுஜித்தின் உடல் மீட்கப்பட்டது. அவனது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் நடுகாட்டுபட்டி கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவனது முகத்தை ஒரு முறையாவது பார்த்துவிட மாட்டோமா என எண்ணி பல ஆயிரம் மக்கள் அங்கு திரண்டனர்.
ஆழ்ந்த இரங்கல்
சுஜித் இறந்த செய்தியை இன்று காலையில் கேட்ட தமிழக மக்கள் பலரும் இடி விழுந்தது போல் நொறுங்கிப்போய் உள்ளனர். குழந்தை சுஜித்துக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களை மக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
போர்வெல் குழியில்
விஜய் கிருஷ்ணா என்பவர் தனது டுவிட்டர் பதிவில் "போர்வெல் குழியில் இருந்து உன்னை தூக்கிவிட்டோம்.. ஆனால் மீளா துயரில் வீழ்ந்து விட்டோம்" என பதிவிட்டுள்ளார்.
பிறப்பு சம்பவம்
இன்னொருவர் பிறப்பு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும். உன் இறப்பு சரித்தரமடா கண்ணா என்று தனது அஞ்சலி பதிவில் கூறியுள்ளார்.
|
குழியில் விழுந்த குழந்தை
குழியில் விழுந்து மரணித்த குழந்தையை மீட்டு, மீண்டும் குழியிலிட்டு மண்ணள்ளிப் போட போகிறது..! "எங்கள் உலகத் தரம் வாய்ந்த அதிநவீன இயந்திரங்கள்" என ஒருவர் கூறியுள்ளார்.