விடுதலை கோரி திருச்சி சிறப்பு முகாம் ஈழத் தமிழர்கள் 19-வது நாளாக போராட்டம்- இலங்கை தலைவர்கள் ஆதரவு!
திருச்சி: திருச்சி மத்திய சிறை வளாகத்தில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு கைதாகி தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் தங்களை விடுதலை செய்ய கோரி 19-ஆவது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி சிறப்பு முகாம் ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று இலங்கை தமிழ் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Recommended Video

திருச்சி கொட்டப்பட்டு மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் (தண்டனை குற்றவாளிகள்) தங்களுக்கான தண்டனை காலம் முடிந்த பின்னரும் தங்களை விடுவிக்காமல் சிறப்பு முகாமில் வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அத்துடன் தங்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இந்த நிலையில் தங்களை விடுதலை செய்யக் கோரி திருச்சி சிறப்பு முகாமில் ஈழத் தமிழர்கள் 17 பேர் இன்று 19-ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் உடல்நிலை மிகவும் மோசமான கொன்பிசியஸ் மற்றும் டிலக்ஷன் ஆகியோர் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை விரைவாக விடுதலை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே திருச்சி சிறப்பு முகாம் ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று இலங்கை தமிழ் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக இலங்கை தமிழ் எம்.பி. செல்வராஜா கஜேந்திரன் கூறியதாவது: தமிழகத்தின் சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்து வரும் உடல்நிலை மிகவும் மிகவும் மோசமடைந்துள்ளது. இந்நிலையில் அவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் இதுவரையில் நிறைவேற்றப்படாதமை உண்மையில் ஏமாற்றத்தையும் மனவேதனையும் தருகின்றது.

இதனை கருத்தில் கொண்டு அவர்களை விடுவிப்பதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப தாயகம் திரும்புவதற்கோ அல்லது தொடர்ந்தும் தமிழகத்தில் இருப்பதற்கோ உரிய ஏற்பாடுகளை தமிழக முதலமைச்சர் செய்ய வேண்டும். இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை யுத்தம் காரணமாகவே இங்கிருந்து பலரும் வெளிநாடுகளுக்குச் சென்ற நிலையில், அவ்வாறு வருவர்களுக்கு அடைக்கலம் தருவதாக கூறி கொண்டே ஈழத்தமிழர்களை சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்திருப்பது என்பது உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். ஆகவே அவர்களை விடுவிப்பதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விடயத்தில் தமிழக முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு அவர்களின் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு செல்வராஜா கஜேந்திரன் கூறினார்.