ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ரங்கநாயகி சேர்த்தி சேவை பாருங்க - கணவன் மனைவி ஊடல் நீங்கி கூடலாகும்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஆதிபிரம்மோற்சவ நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்ச்சியான நம்பெருமாள், தாயார் சேர்த்தி சேவை நேற்று நடைபெற்றது.
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஆதிபிரம்மோற்சவ நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்ச்சியான நம்பெருமாள், தாயார் சேர்த்தி சேவை நேற்று நடைபெற்றது. ஒருவரின் ஜாதகத்தில் களத்திர தோஷம் இருந்தால் அவர்கள் ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் சேர்த்தி சேவையை தரிசித்தால் களத்திர தோஷம் நீங்கும். கணவன் மனைவி இடையே ஓயாத சண்டை இருந்தால் சேர்த்தி சேவை பார்த்தால் சேர்ந்து வாழலாம். சேர்த்தி சேவை நாளில் நம்பெருமாளையும் தாயாரையும் தரிசித்தாலோ,சேர்த்தி சேவை பற்றிய புராணத்தை படித்தாலே போதும் மலைபோல இருக்கும் கணவன் மனைவி பிரச்சினை கூட பனி போல விலகி ஓடும்
Recommended Video
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் கடந்த மார்ச் 25ஆம் தேதியில் இருந்து நடை சாத்தப்பட்டு உள்ளது. அதேநேரம் கோவிலில் நித்தியப்படி கால பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டு வருகின்றன. பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவது இல்லை. பங்குனி தேர் திருவிழா (ஆதிபிரம்மா திருநாள்), சித்திரைத் தேர் திருவிழா (விருப்பன் திருவிழா), பெருமாள், தாயார் கோடை திருநாட்கள் மற்றும் பெருமாள், தாயார் வசந்த திருநாள் விழாக்கள் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதற்கான பரிகார ஹோமங்களான மஹா சாந்தி ஹோமம் மற்றும் சகஸ்ர கலசாபிஷேக பூஜை நடைபெற்றது.
இந்த நிலையில் மீண்டும் அங்குரார்ப்பணம் தொடங்கி விட்டுப்போன பிரம்மோற்சவங்கள் நடத்த வேண்டும் என்று ஆகமத்தில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுபட்ட பங்குனி தேர் திருவிழா கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோவில்
வளாகத்துக்குள் நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. ஆதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கொடியேற்றம் தினம் தொடங்கி நம்பெருமாள் தங்க கருடவாகனம், சேஷ வாகனம், கற்பகவிருட்சவாகனம், குதிரை வாகனங்களில் கருட மண்டபத்தில் எழுந்தருளினார். திருவிழாவின் 9ஆம் நாளான நேற்று நம்பெருமாள் தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தி புராண கதை: கஜமுகாசுரனை சம்ஹாரம் செய்து மூஞ்சூறுவாக மாற்றிய பிள்ளையார்
ஆவணி உத்திரம் நாளில் சேர்த்தி சேவை
பிரம்மதேவன் கொண்டாடிய முதல் உற்சவம் `பங்குனி உத்திரம்' என்கிறது ஸ்ரீரங்கத் தலபுராணம். எனவேதான் திருவரங்கத்தில் கொண்டாடப்படும் பிரம்மோற்சவத்தை ‘ஆதி பிரம்மோற்சவம்' என்கிறார்கள். பெருமாளுக்கும் தாயாருக்கும் இடையே நடைபெற்ற ஊடல் முடிவுக்கு வந்து இருவரும் இணைந்தது பங்குனி உத்திர நாளில்தான். இந்த வைபவம் சேர்த்தி சேவை உற்சவம் என்று ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரப் பெருவிழாவின்போது கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆவணி மாதத்தில் வெள்ளிக்கிழமையன்று உத்திரம் நாளில் சேர்த்தி சேவை நடைபெற்றது.
நம்பெருமாள் தாயார் சேர்த்தி சேவை
இந்நிகழ்ச்சியையொட்டி கண்ணாடி அறையிலிருந்து நம்பெருமாள் தங்கப்பல்லக்கில் காலை 6 மணிக்கு தாயார் சன்னதி சென்றடைந்தார். பின்னர் சமாதானம் கண்டருளி காலை 8 மணிக்கு முன் மண்டபம் வந்து சேர்ந்தார். பின்னர் காலை 10.15 மணிமுதல் மதியம் 1 மணி வரை சர்வ அலங்காரத்துடன் பெருமாள் தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது.
தேரோட்டத்திற்கு பதிலாக கருட வாகனம்
சேர்த்தி சேவைக்கு பின் நம்பெருமாள் தேரில் எழுந்தருளுவது வழக்கம். ஆனால் தடை உத்தரவின் காரணமாக நம்பெருமாள்
கோரதத்திற்கு பதிலாக நேற்று இரவு 8 மணிக்கு கருடமண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளினார். இத்துடன் பங்குனி தேர் திருவிழா நிறைவு பெறுகிறது.
நம்பெருமாள் தாயார் ஊடல் ஏன்
கமலவல்லி நாச்சியாரை பார்க்கப் போனதால் நம்பெருமாள் மீது ஊடல் கொள்கிறார் தாயார் ரங்கநாயகி, அவரை பார்க்காமல் கதவை படாரென்று சாத்தி கோபத்தை காட்டுகிறார். ஒருவழியாக ஊடல் முடிந்து திருமஞ்சனம் முடிந்த பிறகு பெருமாளும் தாயாரும் தம்பதி சமேதராக சேவை சாதிப்பார்கள்.
ஊடல் நீங்கி கூடல் வரும்
தெய்வங்கள் இருதாரங்களை மணந்ததை புராண கதைகளில் படித்திருக்கிறோம். பெருமாளுக்கும் தாயாருக்கும் நடந்த ஊடல் என்பது உலகமயமான ஊடல் போலத் தோன்றினாலும் அதன் உள்ளார்ந்த தத்துவம் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே நிகழும் பாசப் போராட்டம். இதே போல மனிதர்களுக்கும் பலருக்கு இருதார யோகம் அமைகிறது.
தோஷம் நீங்கி திருமணம் நடைபெறும்
களத்திர தோஷம் பெற்று திருமணம் நடைபெறாமல் தடைபட்டு தவிப்பவர்களும் இந்த சுக்கிர ஸ்தலமான ஸ்ரீரங்கத்தில் இன்று நடைபெறும் சேர்த்தி சேவை தரிசித்தாலோ, களத்திர தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். திருமணம் ஆனவர்களும் களத்திர தோஷத்தால் பிரிந்து இருப்பவர்களும், வீட்டில் கணவன் மனைவி இடையே சண்டை போட்டுக்கொண்டிருப்பவர்களும் இந்த சேர்த்தி சேவையை தரிசித்தாலோ, சேர்த்தி சேவை பற்றி படித்தாலோ சண்டை சச்சரவு இன்றி மகிழ்ச்சியான வாழ்க்கை வாழலாம்.