ஒன்னா வாங்க... வோட்டு போட்டுவிட்டு போங்க... மக்களுக்கு அழைப்பிதழ் வைத்த ஸ்ரீரங்கம் தேர்தல் அலுவலர்
திருச்சி: பொதுமக்களிடையே வாக்குப்பதிவை அதிகரிக்கவும் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் ஸ்ரீரங்கம் தேர்தல் அதிகாரி திருமண அழைப்பிதழ் போல் துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களிடையே விநியோகித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் இன்னும் சில வாரங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. ஒருபுறம் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் அனைத்துக் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. மறுபுறம் தேர்தலில் 100% வாக்கப்பதிவு பதிவாக வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
இதற்கான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து அதிகாரிகளுக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு சட்டசபை தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியும் தங்களது தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் பொது மக்களிடம் வாக்களிப்பின் அவசியம் பற்றி விழிப்புணர்வு பிரசாரங்களைச் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியான நிஷாந்த் கிருஷ்ணா ஐ.ஏ.எஸ் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி மகேந்திரன் ஆகியோர் திருமண அழைப்பிதழ் வடிவில் துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு, அதை மக்களிடையே விநியோகத்து நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.
அதில் 'வாக்களிக்க அழைப்பிதழ்' என தலைப்பிட்டு மணமக்கள் பெயர் இருக்கவேண்டிய இடத்தில் 'இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்களிக்கும் வைபோகம்' என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நிகழ்ச்சி வரும் 6-4-2021 காலை 7 மணி முதல் மாலை 5 மணிக்குள் தங்கள் அருகாமையில் உள்ள வாக்குச்சாவடியில் நடைபெற உள்ளதால் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று உள்ள தங்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து தவறாமல் தங்களது வாக்கினைச் செலுத்தும் படி அழைக்கிறோம் எனக் கூறப்பட்டு உள்ளது.
இந்த அழைப்பிதழில் அன்பளிப்பு பெறுவதும், அளிப்பதும் வாக்களிக்கும் விழாவில் பெரும் குற்றமாகும். இதுபற்றி புகார் தெரிவிக்க 1950 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும் என்று குறிப்பிடவும் தவறவில்லை.