ஆடிப்பெருக்கு 2020: ஸ்ரீரங்கநாதனுக்கு தங்கச்சியம்மா... காவிரிக்கு சீர் கொடுத்த நம்பெருமாள்
ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் நம்பெருமாள் தனது தங்கை காவிரி தங்கைக்கு சீர் கொடுத்த நிகழ்வு எளிமையாக நடைபெற்றது.
திருச்சி: ஆயிரம்தான் காசு போட்டு நாம் எடுத்தாலும் உடன் பிறந்த அண்ணன் தம்பிகள் புடவையோ, பரிசோ கொடுத்தால் அந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணையில்லை. அப்படித்தான் ஆண்டுதோறும் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் அம்மாமண்டபம் படித்துறைக்கு எழுந்தருளி காவிரி தங்கைக்கு சீர் கொண்டு வந்து கொடுப்பது வழக்கமாகும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் வந்து கொண்டாட்டத்தை தடுத்தாலும் அண்ணன் தங்கை பாசத்தை தடுக்க முடியுமா என்ன? வழக்கம் போல நம்பெருமாள் நேரில் வந்து தனது தங்கைக்கு சீர் வரிசைகளை கொடுக்க முடியாவிட்டாலும் பட்டர்கள் மூலம் கொடுத்தனுப்பினார்.
உடன் பிறந்த அக்காள், தங்கைகளுக்கு நல்ல நாளில் மங்கல பொருட்களை பரிசாக கொடுப்பது மகிழ்ச்சியான விசயம். ஆடி பதினெட்டாம் பெருக்கு நன்னாளில் ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ரங்கநாதர், அம்மாமண்டபத்திற்கு எழுந்தருளி காவிரியை தங்கையாக பாவித்து சீர் கொடுப்பது சிறப்பு.
பொங்கி பாயும் காவிரி தங்கைக்கு ஆடிப்பெருக்கின்போது ஸ்ரீரங்கம் பெருமாளே சீர் கொடுக்கின்ற காரணத்தால், பெரும்பாலானோர்
தங்கள் உடன் பிறந்த சகோதரிகளுக்கும் சீர் கொடுக்கின்ற வழக்கம் ஏற்பட்டது.
Rasi Palan Today: இன்றைய ராசி பலன்
மாலையாக வணங்கும் காவிரி
ஸ்ரீரங்கம் என்பது ஒரு தீவு. காவிரியும் அதன் உப நதியான கொள்ளிடமும் ஸ்ரீரங்கத்தை மலர் மாலை போல் சூழ்ந்து வணங்குவதைப் போல உள்ளது. மகாவிஷ்ணுவான தன் அண்ணனை வணங்கும் விதமாக ஸ்ரீரங்கத்தை ஒரு மலர் மாலை போல் அணிவித்து மகிழ்கிறாளாம் காவிரி.
ஸ்ரீரங்கநாதனுக்கு தங்கச்சி
மகாவிஷ்ணுவுக்குத் தங்கை முறை காவிரி. பார்வதி தேவி தங்கை என்றால், அவள் வடிவான காவிரியும் தங்கைதானே! தங்கையான காவிரியே தன்னை மலர்மாலை போல் சூழ்ந்து வணங்கிக் கொண்டிருக்கிற காரணத்தால் அண்ணனான ரங்கநாதருக்கும் காவிரியின் மேல் அதீத பாசம்.
பல்லக்கில் வந்த நம்பெருமாள்
தங்கையான காவிரிக்கு பாசமாக பரிசளிப்பார் ஸ்ரீரங்கநாதர். ஆடிப்பெருக்கு நாளன்று மங்கல பொருட்களை பரிசாக கொடுப்பார். ரங்கநாதர் ஆலயத்தின் பிரதான உற்சவரான நம்பெருமாள் சீர்வரிசைப் பொருட்களுடன் புறப்பட்டு ஸ்ரீரங்கவிலாஸ் மண்டபத்தில் எழுந்தருளினார்.
தங்கைக்கு சீர்வரிசை
ஆண்டுதோறும் நம்பெருமாள் பல்லக்கு மூலம் புறப்பட்டு அம்மா மண்டபத்திற்கு வருவார். யானை மீது சீர்வரிசை பொருட்கள் கொண்டு வரப்படும். தன் தங்கையான காவிரியைப் பார்த்தபடி நம்பெருமாள் அமர்ந்திருக்க காவிரிப் படித்துறையில் நம்பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறும் திருமஞ்சனம் முடிந்த பின்னர் யானை மேல் வைத்து எடுத்து வரப்பட்ட சீர்வரிசைப் பொருட்களை காவிரிக்கு கொடுப்பார் நம்பெருமாள் ஆண்டுதோறும் இந்த சடங்கு சம்பிரதாயமாக நடைபெறும். இந்த ஆண்டு அப்படி நடைபெற வில்லை.
பக்தர்கள் யாருமில்லை
ரங்கவிலாஸ் மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் கொடுத்தனுப்பிய பட்டுப்புடவை, மாலை மங்கள சீர்வரிசை பொருட்களை அர்ச்சகர்கள் காவிரி அன்னையிடம் கொண்டு வந்து கொடுத்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு நாளில் காவிரிக்கு சீர்வரிசைப் பொருட்களை கொடுக்கும் போது அங்கே கூடியிருக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் காவிரியை வணங்கி, ‘ரங்கா... ரங்கா' கோஷத்தை எழுப்புவார்கள். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சீர்வரிசை கொண்டு செல்வதை வீட்டில் இருந்தே பார்த்த பக்தர்கள் ரங்கா ரங்கா என்று முழக்கமிட்டு வணங்கினர். அண்ணன் நம்பெருமாளை நேரில் பார்க்க முடியாத காவிரி அன்னையும் சோகத்துடனேயே சீர்வரிசைகளை பெற்றுக்கொண்டார்.ச4