ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் கைத்தல சேவை - திருமங்கை மன்னன் வேடுபறி
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் ராப்பத்து உற்சவத்தின் ஏழாம் நாளன்று கைத்தல சேவை நடைபெற்றது. இன்று திருமங்கை மன்னன் வேடுபறி நடைபெறுகிறது.
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ராப்பத்து உற்சவத்தின் 7ஆம் நாளான்று நம்பெருமாள் திருக்கைத்தல சேவை நடைபெற்றது. இதையொட்டி மாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 4 மணிக்கு பரமபதவாசலை கடந்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நம்பெருமாளை தரிசனம் செய்தனர். எட்டாம் நாளான இன்று திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த மாதம் 14ஆம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. மறுநாள் பகல்பத்து உற்சவம் தொடங்கியது. தினசரியும் நம்பெருமாள் அலங்கார ரூபமாக எழுந்தருளினார். பகல் பத்து உற்சவம் முடிந்து கடந்த மாதம் 25ஆம்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அன்றைய தினம் நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ராப்பத்து உற்சவத்தின் 7ஆம் நாளான நேற்று நம்பெருமாள் திருக்கைத்தல சேவை நடைபெற்றது. இதையொட்டி மாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 4 மணிக்கு பரமபதவாசலை கடந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலை 4.45 மணிக்கு திருமாமணி மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு மாலை 5 மணி முதல் மாலை 5.15 மணிவரை திருக்கைத்தல சேவை நடைபெற்றது.
அப்போது உற்சவர் நம்பெருமாளை அர்ச்சகர்கள் கைகளில் ஏந்தி, எதிரில் நிற்கும் பக்தர்களுக்கும், பராங்குசநாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளி காத்திருக்கும் நம்மாழ்வாருக்கும் நன்கு தெரியும்படி காட்டினார்கள். மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணிவரை உபயகாரர் மரியாதையுடன் பொது ஜனசேவையும் நடைபெற்றது.
இரவு 9 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் நம்பெருமாள் இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
ராப்பத்து உற்சவத்தின் 8ஆம் நாளான இன்று வெள்ளிக்கிழமை திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி மாலை 5 மணிக்கு சந்தனு மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு மாலை 5.30 மணிமுதல் மாலை 6 மணிவரை வையாளி வகையறா கண்டருளுகிறார். பின்னர் திருமாமணி மண்டபத்தில் இரவு 7 மணிமுதல் இரவு 8 மணிவரை உபயகாரர் மரியாதையுடன் பொதுஜனசேவையும் நடைபெறுகிறது.
10ஆம் திருநாளான 3ஆம் தேதி தீர்த்தவாரியும், 4ஆம்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது.