தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரி வழக்கு தொடர்ந்த சிலை கடத்தல் கைதி
திருச்சி: சிலைக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுபாஷ் சந்திரகபூர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்த மனு குறித்து விளக்கமளிக்க அரசு தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்த பழைமையான சிலைகளை வெளிநாட்டுகளுக்கு கடத்தி சென்றதாக, சுபாஷ் சந்திர கபூர் மீது தமிழகத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யபட்டன.
ஜெர்மனியில் இருந்த சுபாஷ் சந்திர கபூர் 2011ல் கைது செய்யபட்டு, 2012ல் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார். சென்னை புழல் சிறையில் அடைக்கபட்டிருந்த அவர் திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
இதய நோய் உள்ளிட்ட பல நோய்களால் பாதிக்கப்பட்ட அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
அந்த மனுவில், சென்னை அரசு மருத்துவமனையில் உள்ள வசதிகள் திருச்சியில் இல்லை என்பதால், தனது சொந்த செலவில், இதய நோய்க்கு சென்னை அப்பல்லோ அல்லது பிற தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் நிர்மல்குமார் அமர்வு, மனு குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி அரசு தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.