இன்று கல்லறைத் திருநாள்... சுஜித் கல்லறையில் சாக்லேட்கள் வைத்து பிரார்த்தனை
திருச்சி: மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவன் சுஜித் நினைவிடத்தில் அவனுக்கு பிடித்த சாக்லேட்களை வைத்து கிராமமக்கள் பிரார்த்தனை செய்தனர்.
சிறுவன் சுஜித்துக்கு மிகவும் பிடித்த சாக்லேட்களை அவன் கல்லறையில் வைத்து மனமுருகி உறவினர்கள் பிரார்த்தித்தனர்.
மேலும், பூக்களால் கல்லறையை அலங்கரித்தும், மெழுகுவர்த்தி பற்ற வைத்தும் நடுக்காட்டுபட்டி கிராமத்தில் தங்கள் துயரத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.
"நான் சுஜித் பேசுகிறேன்.. 80 மணி நேரம் மரணத்துடன் போராடியது கொடூரமானது"
நினைவஞ்சலி
உலகம் முழுவதும் கிறிஸ்துவ மக்களால் கல்லறைத் திருநாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.குடும்பத்தில் இறந்துபோன உறவினர்கள், முன்னோர்கள் நினைவாக அவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறைக்கு சென்று சிறப்பு பிரார்த்தனை நடத்துவது வழக்கம்.
பிரார்த்தனை
ஆவாரம்பட்டி புதூரில் உள்ள பாத்திமா நகர் கல்லறையில் சுஜித் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளதால், அங்கு முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்த கிராமமக்கள் அனைவரும் தவறாது தங்கள் குடும்பப் பிள்ளையாக பாவித்து சுஜித் கல்லறையிலும் பிரார்த்தனை செய்தனர். ஊதுபத்தி எரியவிட்டும், மெழுகுவர்த்தி பற்ற வைத்தும் தங்கள் துயரத்தை வெளிப்படுத்தினர்.
சுத்தம் செய்து
ஆவாரம்பட்டி பாத்திமாநகர் கல்லறைக்கு சென்று கடந்த இரண்டு நாட்களாக பலரும் சுஜித் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருவதால், அங்கு புல் பூண்டுகள் பிடுங்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை சுஜித்தின் உறவினர் குடும்பம் அவனுக்கு பிடித்த டெய்ரி மில்க், மில்க்கி பார் சாக்லேட்களை கல்லறையில் வைத்து வழிபட்டது.
திருப்பலி
கிறிஸ்துவ தேவாலயங்களிலும், கல்லறைகளிலும் சிறப்பு திருப்பலிகள் நடத்தப்பட்டன. அதில் மணப்பாறை சுற்றுவட்டார கிராமங்களான மஞ்சம்பட்டி, கருங்குளம், பூலாங்குளம் உள்ளிட்ட கிராமத்தில் இருந்து மக்கள் கலந்துகொண்டனர்.