"பாஜக ஆபீசிலும், காஞ்சி மடம் அருகிலும் பழனிபாபா படம் பொறித்த கொடியை ஏற்றுவோம்".. தடா ரஹீம் அதிரடி
திருச்சியில் இந்திய தேசிய லீக் தலைவர் தடா ரஹிம் பேட்டி தந்துள்ளார்
திருச்சி: இஸ்லாமியர் அதிகம் இருக்கும் பகுதிகளிலும், பள்ளிவாசல் அருகிலும் பாஜக கொடிக்கம்பத்தை நடுகிறார்கள்.. இதுக்கு பதிலடியாக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தின் முன்பும், காஞ்சி மடம் அருகிலும் பழனிபாபா படம் பொறித்த கொடியை ஏற்றுவோம்" என்று இந்திய தேசிய லீக் மாநில தலைவர் தடா ரஹீம் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.. இந்த கூட்டத்துக்கு மாநில தலைவர் தடா ரஹீம் தலைமை தாங்கினார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் சொன்னதாவது: மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் நாடு முழுவதும் இஸ்லாமியருக்கு எதிரான ஒரு சிந்தனையோடு பல சட்டங்களை இயற்றி வருகிறது. இது இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானதாக இருக்கிறது... இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
தேர்தல் நெருங்கி வருவதால் பாஜக கலவரத்தை ஏற்படுத்தி, அதன் மூலமாக தமிழகத்தில் தங்களது ஆட்சியை நிறுவ வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறது. 'நீட்' என்ற ஒரு கொடுமையான தேர்வை அனுமதித்து இருப்பதால், அப்பாவி மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்... இது தற்கொலை அல்ல. பாஜகவினால் ஏற்படுத்தப்பட்ட கொலை என்றே சொல்ல வேண்டும்.
இஸ்லாமியர் அதிகம் இருக்கும் பகுதிகளிலும், பள்ளிவாசல் அருகிலும் பாஜக கொடிக்கம்பம் நிறுவப்படுகிறது. இதற்குப் பதிலடியாக சென்னையில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தின் முன்பும், காஞ்சி மடம் அருகிலும் பழனிபாபா படம் பொறித்த கொடியை ஏற்றுவோம்" என்றார்.