அரசியலமைப்பு சட்டத்தை மீறும் மோடி.. மேகதாது நோக்கி ஜன.1ல் விவசாயிகள் பேரணி
திருச்சி: கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேகதாது அணை நோக்கி வரும் 1-ஆம் தேதி விவசாயிகள் பேரணி நடைபெறும் என்று விவசாய சங்க தலைவர் பிஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தமிழக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு வரைவு திட்டம் மற்றும் ஆய்வு திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு மத்திய அரசு கொடுத்த அனுமதியை திரும்ப பெற வேண்டும்.
கர்நாடகா முதல்வர் சட்டத்துக்கு புறம்பாக மேகதாது அணை கட்டி தமிழகத்திற்கு தான் தண்ணீர் தரப்போகிறோம் என்றும், அதற்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கூறுவது மிக மோசடியானது. தமிழகத்தை அழிக்கும் நோக்கம் கொண்டது.
மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம். அதே நேரம் வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க கொடுத்துள்ள அனுமதியை தடை செய்யமாட்டோம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் கூற்று முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. இதனால் கோர்ட்டு தீர்ப்பு மீது தமிழக விவசாயிகளுக்கு சந்தேகம் இருக்கிறது. இது இந்தியாவின் ஒற்றுமைக்கு பேராபத்தை ஏற்படுத்தும்.
பிரதமர் மோடி கர்நாடகாவில் ஓட்டு வாங்குவதற்காக காவிரி நீர் விவகாரத்தில் மறைமுக சூழ்ச்சியில் ஈடுபடுகிறார். அரசியல் அமைப்பு சட்டத்தையே பிரதமர் மீறுகிறார்.
எனவே வரும் 1ம் தேதி ஓசூரில் இருந்து மேகதாது நோக்கி, பல்லாயிரக் கணக்கான விவசாயிகள் பேரணி செல்ல உள்ளோம். மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஒன்றாம் தேதியை துக்க நாளாக அறிவித்து அனைவரும் புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.