காய் வாங்க கூட நீங்க வெளியே வராதீங்க.. நாங்கள் வரோம்.. 11 வகையான காய்கறிகள் ரூ150 மட்டுமே.. அமைச்சர்
திருச்சி: திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான 11 வகையான காய்கறிகள், 150 ரூபாய் மலிவு விலைக்கு தமிழ்நாடு அரசால் விற்பனை செய்யப்படுகிறது.
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு, ரூ.150 விலையில் 11 காய்கனிகளுடன் கூடிய தொகுப்புப் பை வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் வெல்லமண்டி என்.நடராஜன், எஸ். வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.
ஊரடங்கு அமல் காரணமாக, பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க மாநகரிலும் , மாவட்டப் பகுதிகளிலும் தற்காலிக காய்கனி சந்தைகள் தொடங்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும், கூட்டுறவுத் துறை மூலமாக நகரும் பண்ணைப் பசுமைக் கடைகள் மூலமும் விற்பனை நடைபெறுகிறது.
இனி காய்கறி, மளிகை பொருட்களை மதியம் 1 மணி வரை மட்டுமே வாங்கலாம்.. தமிழக அரசு
தொகுப்பு பை
இந்நிலையில் பொதுமக்கள் காய்கனிகளை வாங்குவதற்காக அதிகளவில் வெளியே வருவதை தடுக்கவும், அவரவா் இருப்பிடப் பகுதிகளுக்குச் சென்று குறைந்த விலையில் வழங்கும் வகையில் காய்கனிகள் தொகுப்புப் பை வழங்கும் திட்டம் வெள்ளிக்கிழமை முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வளவு எடை
திருச்சி மாநகராட்சி மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தில் கத்தரிக்காய், தக்காளி, முருங்கை, பீட்ருட், கேரட், உருளைக்கிழங்கு, பெரியவெங்காயம், தேங்காய், வாழைக்காய், செளசெள காய் ஆகியவை, ஒரு கிலோ முதல் அரைக் கிலோ வரை அந்தந்த காய்கனிகளின் விலைகளுக்கு தகுந்தபடி எடை அளவு நிா்ணயம் செய்து மொத்தமாக வழங்கப்படுகிறது.
ரூ 150 மதிப்பிலான தொகுப்பு பைகள்
திருச்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், காய்கனிகள் கொண்டு செல்லும் வாகனங்களை அமைச்சா்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளா்மதி ஆகியோா் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனா். மேலும், பொதுமக்களுக்கு ரூ.150 மதிப்பில் 11 வகை காய்கனிகள் அடங்கிய தொகுப்புப் பைகளையும் அமைச்சா்கள் வெல்லமண்டி நடராஜன், எஸ்.வளர்மதி ஆகியோர் வழங்கினார்கள்.
தமிழக அரசு விற்பனை
பின்னர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது "ஒரு வாரத்திற்கு தேவையான 11 வகையான காய்கறிகள், 150 ரூபாய் என்ற மலிவு விலைக்கு தமிழ்நாடு அரசால் விற்பனை செய்யப்படுகிறது.
காய்கறி விற்பனை
மக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்க வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்ற காரணத்திற்காக வீடு தோறும் சென்று, காய்கறி விற்பனை செய்யப்படுகிறது.இந்தக் காய்கறிகளை மக்கள் வாங்கி பயனடைந்து கொள்ள வேண்டும். வீட்டைவிட்டு வெளியே வராமல் உள்ளேயே இருக்க வேண்டும். திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளை உள்ளடக்கிய, 4 கோட்ட பகுதிகளில் தினமும் இந்த காய்கறி விற்பனை நடைபெறும்இவ்வாறு அவர் கூறினார்.
ஊரடங்கு உத்தரவு
நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன், உதவி ஆணையா்கள் கலந்து கொண்டனா். திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட ஸ்ரீரங்கம், பொன்மலை, அரியமங்கலம், கோ. அபிஷேகபுரம் என 4 கோட்டங்களிலும் தலா ஒரு வாகனம் வீதி, வீதியாக சென்று பொதுமக்களுக்கு ரூ.150 விலையில் காய்கனிகள் வழங்கப்படும். ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியுள்ள நாள் வரையிலும் இத் திட்டம் தொடரும் என மாநகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.