சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தவருக்கு கொரோனா - ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பா என பரிசோதனை
சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் திருச்சி வந்தவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.கொரோனா உறுதியான நபருக்கு திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருச்சி: சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் திருச்சி வந்தவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. தொற்று உறுதியான தஞ்சை நபருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உள்ளதா என கண்டறிய மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Recommended Video
டெல்டா கொரோனாவால் உலகம் முழுவதும் கடும் சிரமத்திற்கு ஆளாகி சற்றே மீண்ட நிலையில் அதை விட வீரியமான ஓமிக்ரான் என்ற கொரோனா தற்போது உலகம் முழுவதும் 30 நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட ஓமைக்ரான் வகை கொரோனா ஆபத்தானதாக இருக்கலாம் எனவும் இது வேகமாக பரவக்கூடியது எனவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
ஓமிக்ரான் வைரஸ் விரைவாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் தன்மை உடையது என்றும் தடுப்பூசிகள் இந்த வைரஸுக்கு எதிராக குறைந்த அளவே செயலாற்றுவதாகவும் கூறப்படுகிறது. ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பின் சில அறிகுறிகளில் சோர்வு, லேசான தசை வலி, தொண்டை அரிப்பு, வறட்டு இருமல் மற்றும் லேசான காய்ச்சல் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
உருமாறிய ஓமிக்ரான் வகை கொரோனா வைரசை 3 மணி நேரத்தில் கண்டறிவதற்கான ஆய்வக வசதிகளை, சென்னை கோவை உள்ளிட்ட 4 நகரங்களில் தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. தக்பாத் (TAQPATH) எனப்படும் டெஸ்ட் கிட் மூலமான பரிசோதனையை, தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
பெரும் பயம், குழப்பம்.. பெங்களூர் டாக்டருக்கு ஓமிக்ரான் வந்தது எப்படி? லோக்கல் பரவல் தொடங்கிவிட்டதா?
சர்வதேச விமான நிலையங்கள் அமைந்துள்ள, சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய நகரங்களில், மொத்தம் 12 அரசு ஆய்வகங்களில் இந்த வகை பரிசோதனை தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளின் மரபணுவில் ஏதேனும் மாற்றம் உள்ளதா, குறிப்பிட்ட பகுதிகளில் அதிக அளவிலான மக்களுக்கு தொற்று உள்ளதா எனவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வெளிநாடுகளில் இருந்து வருவோர் கடந்த 14 நாட்களுக்கான பயண விவரம், நெகட்டிவ் பிசிஆர் பரிசோதனை அறிக்கை ஆகியவற்றை மத்திய அரசின் ஏர் சுவிதா போர்டலில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் விமான நிலையத்தில் வந்திறங்கிய பின் ஆர்டிபிசிஆர் பரிசோதனை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தப் பரிசோதனையின் முடிவுகள் வரும்வரை விமான நிலையத்தை விட்டு வெளியேறக் கூடாது. பரிசோதனையில் கொரோனா இல்லை எனத் தெரியவந்தால், வீட்டுக்குச் சென்று 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு 8வது நாளில் மீண்டும் ஒரு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும். ஒருவேளை பயணிகளுக்கு கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், உடனடியாக தனிமைப்படுத்தப்படுவார்கள். அரசின் மருத்துவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்தப் புதிய விதிமுறைகள் அனைத்தும் வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதனிடையே ஓமிக்ரான் வைரஸ், இந்தியாவில் இருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உலக அரங்கில் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படும் 30வது நாடாக இந்தியா மாறியிருக்கிறது. இந்தியாவில் முதல் முறையாக இருவருக்கு ஓமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கர்நாடகாவில் 46 மற்றும் 66 வயதுடைய இருவருக்கு இந்த கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. ஓமிக்ரான் பாதித்த 46 வயது நபருடன் தொடர்புடைய 5 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்துதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று சிங்கப்பூரில் இருந்து இரண்டு விமானங்கள் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த 600க்கு மேற்பட்ட பயணிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டனர். அவர்களுக்கு எந்த ஒரு தொற்று இல்லை என கண்டறியப்பட்டு அவர்கள் அனைவரும் விமான நிலையத்திலிருந்து இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.நள்ளிரவு சிங்கப்பூரிலிருந்து வந்த ஸ்கூட் விமானத்தில் 136 பயணிகள் வந்தனர். அவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அப்போது தஞ்சையை சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த நபருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உள்ளதா எனக் கண்டறியும் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவு வந்த பின்னரே என்ன வகை பாதிப்பு என்று தெரியவரும். தொடர்ந்து அந்த நபர் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.