திருச்சியில் பள்ளிவாசல் முன் பகுதி இடிக்கபட்டதால் பதற்றம்... 3 மணி நேரம் சாலைமறியலால் பரபரப்பு..!
திருச்சி: திருச்சி திருவானைக்கோவிலில் சாலை விரிவாக்கப் பணிக்காக பள்ளிவாசல் முன் பகுதி இடிக்கப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி திருவானைக்கோவில் மேம்பாலத்தை ஒட்டி சர்வீஸ் ரோடு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பாக மாம்பழச் சாலையிலிருந்து திருவானைக்கோவில் வரை பாலத்தின் வலதுபுறம் உள்ள கட்டிடங்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அந்தப் பகுதியில் இருந்த பள்ளிவாசல் சர்வீஸ் சாலை அமைக்க இடையூறாக உள்ளதாக கூறி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பள்ளிவாசலின் முன் பகுதியை இன்று காலை இடித்தனர். காவல்துறை உதவியுடன் ஜே.சி.பி.வாகனம் மூலம் பள்ளிவாசல் இடிக்கப்படுவதாக பரவிய தகவலை அடுத்து திருச்சி மாநகரம் முழுவதும் இருந்து இஸ்லாமிய அமைப்புகள் அங்கு திரண்டு சென்றன.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் 3 மணி நேரமாக சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் அதிகரித்தது. பள்ளிவாசலை இடிக்க நீதிமன்றம் தடை ஆணை பிறப்பித்துள்ள நிலையில் அதனை மீறி அதிகாரிகள் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகை முன்பணம் ரூ.10000 - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
பள்ளிவாசலின் முன் பகுதி சுமார் 3 அடியில் இருந்து 5 அடி வரை இடிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனிடையே இந்த நடவடிக்கைக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் பள்ளிவாசல் கட்டிடத்தை இடிக்க அதிகாரிகளுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது என வினவியுள்ளார்.
நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்ட திருச்சி மண்டல நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.