மத நல்லிணக்க நாயகன் நைனார்... மாற்று மதத்தினர் மனதிலும் ராஜா..!
திருச்சி: இஸ்லாமியர் ஒருவர் மறைவால் இந்து மத சகோதரர்கள் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களை புறந்தள்ளிய நிகழ்வு திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூரில் நடந்துள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டியை சேர்ந்தவர் நைனார் ராஜா. இவர் அப்பகுதி மக்களிடையே சாதி மத வேறுபாடுகளை கடந்து அனைவரிடத்திலும் அன்பொழுக பழகி வந்திருக்கிறார். கைநாட்டு நபர்கள் முதல் கல்லூரியில் உயர் பட்டம் பெற்றவர்கள் வரை எந்த ஒரு உதவியானாலும் நைனார் ராஜாவை துணைக்கு வைத்துக் கொள்வார்கள்.
அவரும் ஒரு பைசா கூட எதிர்பார்க்காமல் நட்புக்கு மரியாதை அளித்து வையம்பட்டி பகுதி மக்களுக்கு எந்த ஒரு பிரச்சனை என்றாலும் முதல் ஆளாக களத்தில் நின்று வந்திருக்கிறார். இப்படி ஊருக்காக ஓடி ஓடி உதவி செய்து வந்த நைனார் ராஜா கடந்த 4 நாட்களுக்கு முன்னர் கடைவீதியில் பேசிக்கொண்டிருந்து விட்டு வீடு திரும்பிய நிலையில் மாரடைப்பால் காலமானார். இத்தனைக்கும் அவருக்கு மிக இளம் வயது தான் ஆகிறது.
இவரது மறைவு வையம்பட்டி பகுதி மக்களின் மனதை உலுக்கிவிட்டது என்றே சொல்லலாம். அந்தளவிற்கு இந்து, கிறிஸ்டியன், முஸ்லீம் என எந்த பாகுபாடும் பார்க்காமல் அனைத்து தரப்பு மக்களின் சுக துக்க நிகழ்வுகளிலும் பங்கெடுத்திருக்கிறார்.
திமுகவில் எந்த எதிர்பார்ப்புமின்றி உழைத்த நைனார் ராஜாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, தனது நிகழ்ச்சிகள் முழுவதையும் ரத்துசெய்துவிட்டு அஞ்சலி செலுத்த சென்ற அன்பில் மகேஷ், கல்லறை வரை நடந்தே சென்று கண்ணீர் மல்க இறுதி மரியாதை செலுத்திவிட்டுத் தான் சென்றார்.
உளவு தகவலை கூட கேட்கவில்லை.. அன்றாட பணிகளை செய்ய மறுக்கும் டிரம்ப்.. அமெரிக்காவில் தொடர் பதற்றம்!
இதனிடையே நைனார் ராஜா மறைவால் அவருக்கு நெருக்கமான இந்து மத சகோதரர்கள் குடும்பங்களில் இந்தாண்டு தீபாவளி கொண்டாடவில்லை. இஸ்லாமியர் ஒருவர் மறைவு இந்து மத சகோதர்கள் மத்தியில் இந்தளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அவர் உண்மையிலே மத நல்லிணக்க நாயகர் என்று தான் அழைக்கப்பட வேண்டும்.
மதங்களை வைத்து அரசியல் செய்யும் போக்குக்கு மத்தியில் இது போன்ற அபூர்வ நிகழ்வுகளும் ஆங்காங்கு தமிழகத்தில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.