இறந்து போன தனுஜா குரலில் பேசிய ஐயர்.. "நான் தெய்வம் ஆயிட்டேன்".. திருச்சி அருகே நூதனம்!
விபத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு பெற்றோர் கோயில் கட்டி வழிபட்டு வருகிறார்கள்
திருச்சி: இதோ இவள்தான் தனுஜா.. இப்படி சிலையாக வடித்திருப்பது சிறுமி தனுஜாவைதான்! பெற்ற மகள் இப்போது கடவுளாகிவிட்டாள்!
மணப்பாறை அருகே உள்ள வெள்ளையம்மாபட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் ஒரு டெய்லர். மனைவி பெயர் லட்சுமி. இவர்களுக்கு காவியா, தனுஜா ஆகிய 2 பெண் குழந்தைகள்.
கடந்த 2007-ம் ஆண்டு குழந்தைகள் ரெண்டு பேருக்கும் திடீரென உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. மணப்பாறையில் உள்ள ஆஸ்பத்திரியில் கொண்டு சென்று காட்டலாம் என்று பழனிசாமி, ரெண்டு பேரையும் பைக்கில் ஏற்றிக் கொண்டு கிளம்பினார்.
9-ம் நாள் காரியம்
பன்னாங்கொம்பு அருகே சென்றபோது அந்த வழியாக ஒரு பால் வேன், வேகமாக வந்து, பைக்கில் மோதியது. இதில், தனுஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாள். அப்போது அவளுக்கு வயசு 4தான்! உயிருக்குயிராக வளர்த்த தனுஜாவின் சடலத்தை வைத்து கொண்டு பெற்றோர் கதறினார்கள். இறுதிசடங்கும் நடந்து முடிந்தது. 9-ம் நாள் காரியம்!
ஈம காரியங்கள்
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில்தான் ஈம காரியங்களை பெற்றோர் செய்து கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் வேத மந்திரங்கள் சொல்லி கொண்டிருந்த ஐயர், திடீரென தனுஜா குரலில் பேசினாராம். "அப்பா.. எனக்கு ஈம காரியங்கள் செய்யாதீங்க.. இன்னும் 3 வருஷத்துல நான் தெய்வமாயிடுவேன்.. அப்போ நம்ம வீட்டிற்கு வருவேன்" என்று அருள் வாக்கு சொன்னாராம்.
தனுஜாவுக்கு சிலை
இதனால் நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியும் அடைந்தனர் பெற்றோர். 3 வருஷம் முடிஞ்சாச்சு. இப்போது தனுஜாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஒன்று சேர்ந்து பழனிச்சாமி வீட்டுக்கு பக்கத்திலேயே தனுஜாவுக்கு கோயில் கட்டி விட்டார்கள். தனுஜாவுக்கு ஒரு சிலையும் வைத்துள்ளனர்.
அபிஷேகங்கள்
வருஷந்தோறும் சித்திரை மாதம் பால்குடம், பூக்குழி இறங்கும் திருவிழா இந்த கோயிலில் நடந்து வருகிறது. பூக்குழி இறங்கி தனுஜாவின் சிலைக்கு பாலாபிஷேகம், பல்வேறு வகையான அபிஷேக ஆராதனைகள் நடப்பது வழக்கமாக உள்ளது. கோயில் தனுஜாவுக்கு என்றாலும், வெள்ளையம்மாபட்டி, பின்னத்தூர், பன்னாங்கொம்பு, பலவாரப்பட்டி, கலிங்கப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் இதில் தவறாமல் கலந்து கொண்டு வழிபட்டு வருகிறார்களாம்!