திருச்சியில் ரயில் நிலைய வளாகத்திலிருந்த அம்மன் கோவில் இடித்து அகற்றம்.. பக்தர்கள் அதிர்ச்சி
திருச்சி: திருச்சி ஜங்ஷன் ரயில் நிலைய வளாகத்தில் அமைந்திருந்த தேவி கருமாரியம்மன் கோவில் இடித்து அகற்றப்பட்டதால் பக்தர்கள் கடும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தனர். சம்பவத்தின் போது ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலைய வளாகத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில் அமைந்திருந்தது. ரயில் நிலையத்தில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் சேர்ந்து இக்கோவிலை அமைத்திருந்தனர். அதன்பிறகு ஒரு அமைப்பாக சேர்ந்து கோவிலை நிர்வகித்து வந்தனர்.
ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளும், பொதுமக்களும் அங்குள்ள ஆட்டோ நிறுத்த டிரைவர்களும் இக்கோவிலில் வழிபாடு நடத்துவது உண்டு. ஆண்டு தோறும் திருவிழாக்களும் பண்டிகை நாட்களில் சிறப்பு பூஜைகளும் இக்கோயிலில் நடைபெற்று வந்தது. ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் ரயில் நிலைய வளாகத்தில் அமைந்திருந்ததால் இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கியது.
இந்நிலையில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரூ.30 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. நடைபாதை மேற்கூரை ரயில் நிலைய நுழைவு வாயில் வரை நீட்டிப்பு, கூடுதல் நுழைவு பாதையில் பஸ்கள் வந்து செல்ல வசதி உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.
இதற்காக ரயில் நிலைய வளாகத்தில் இருந்த தேவி கருமாரியம்மன் கோவில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாகவும், அதனை அகற்றிடவும், அந்த இடத்தில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் ரயில்வே அதிகாரிகள், கோவில் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பினர். இதனால் அதிர்ச்சியடைந்த கோவில் நிர்வாகிகள் கோவிலை இடிக்க வேண்டாம் என திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.
ஆனால் கோரிக்கையை ஏற்க மறுத்த ரயில்வே அதிகாரிகள் நேற்று கோவிலை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரயில்வே போலீசார் என ஏராளமானோர் குவிக்கப்பட்டனர். கோவிலில் உள்ள மூலவர் அம்மன் சிலை, விநாயகர், நாகம்மாள் உள்பட 13 சிலைகள் அகற்றப்பட்டு வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. பின் பொக்லைன் எந்திரம் மூலம் கோவிலை இடித்து அகற்றும் பணி நடந்தது.
கோவில் சுற்றுச்சுவர் உள்பட அனைத்தும் இடித்து அகற்றப்பட்டன. இதனால் அந்த இடமே தற்போது வெறிச்சோடி உள்ளது. இதனால் பக்தர்கள் கடும் வேதனை அடைந்தனர். போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டிருந்ததால் யாரும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்க முடியாமல் தவித்தனர். பக்தர்கள் கூறுகையில், "கோவிலை இடித்து அகற்றி விட்டு அந்த இடத்தில் என்ன மேம்பாட்டு பணி நடைபெற போகிறதோ தெரியவில்லை என வேதனைப்பட்டனர்