முகிலனுக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா.. தமிழக அரசுக்கு திருமுருகன் காந்தி எச்சரிக்கை
முகிலன் விஷயத்தை அரசு கண்டுகொள்ளவில்லை என திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.
திருச்சி: முகிலனுக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா அதுக்கு தமிழக அரசுதான் காரணம் என்று திருமுருகன் காந்தி ஆவேசமாக கூறியுள்ளார்.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன்! சமூக செயற்பாட்டாளரும்கூட! ஸ்டெர்லைட் போராட்டத்தின் வன்முறை வெறியாட்டத்தினை பத்திரிக்கையாளர் மன்றத்தில் அம்பலப்படுத்தியவர்.
இந்நிலையில் கடந்த 15-ம் தேதியிலிருந்து முகிலனை காணவில்லை என கூறப்படுகிறது.
அன்றைய தேதியில் சென்னை எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றவர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை என்று தினம் தினம் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இதுசம்பந்தமாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், "முகிலனின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டியதும், அவருக்கு என்ன ஆனது? அவர் எங்கே இருக்கிறார்? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டியதும் அரசின் கடமை என்றும் தமிழக அரசு சீரிய கவனமெடுத்து அவரைப் பாதுகாப்பாக மீட்க வேண்டும்" எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தமிழக அரசு மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். முகிலன் காணாமல் போனதற்கு அரசே காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நடந்து கொண்டிருக்கும் தேர்தல் பரபரப்புகளில் முகிலன் விவகாரத்தை தமிழக அரசு கண்டுகொள்ளாமலே விட்டுவிட்டது என்று புகார் சொன்ன திருமுருகன்காந்தி, முகிலன் உயிருக்கு மட்டும் ஆபத்து என்றால் அதற்கு தமிழக அரசுதான் முழு பொறுப்பும் என்று ஆவேசமாக கூறினார், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி.