தமிழகத்தில் இன்னும் எதற்கு இ-பாஸ்...? காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் கேள்வி
திருச்சி: மத்திய அரசே இ-பாஸ் முறை தேவையில்லை எனக் கூறிய பிறகும் தமிழகத்தில் இ-பாஸ் முறையை நீட்டித்து வருவது ஏன் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான திருநாவுக்கரசர் வினவியுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இனியும் காலதாமதம் செய்யாமல் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய முடிவெடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.
அம்மா கோவிட்-19 திட்டம் : ரூ. 2500 கட்டுங்க... பல்ஸ் ஆக்ஸிமீட்டர், வெப்பமானி வீடு தேடி வரும்
ஊரடங்கு
மழை விட்டும் தூவானம் விடாத கதையாக ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அரசு தடை விதித்திருப்பது மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு தற்போது அமலில் உள்ள இ-பாஸ் முறை மேலும் சிரமத்தை அதிகப்படுத்தியுள்ளது. இதையறிந்த அரசியல் கட்சித் தலைவர்கள் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
திட்டவட்டம்
அந்த வகையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், திருச்சி எம்.பியுமான திருநாவுக்கரசர் இ-பாஸ் முறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இ-பாஸ் பெற வேண்டும் என்ற நடைமுறையால் மக்கள் படும் சிரமங்கள் ஏராளம் என்றும் இனியும் இ-பாஸ் முறையை ஏற்க முடியாது எனவும் திருநாவுக்கரசர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு
இ-பாஸ் முறை தேவையில்லை என மத்திய அரசு அழுத்தம் திருத்தமாக அறிவித்த பின்னரும், தமிழக அரசு அதனை கைவிட மறுப்பதற்கான காரணம் புரியவில்லை என்றும் இ-பாஸ் மக்களை மன அழுத்தத்திற்கு தள்ளுவதாகவும் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். உறவினர்கள், நண்பர்களின் இறுதிகாரியங்களுக்கு கூட செல்ல முடியாமல் மக்கள் தவிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
நல்ல அறிவிப்பு
மேலும், கொரோனா அச்சத்தால் பொதுமக்கள் பலரும் குடும்பத்துடன் வெளியே வரவே தயங்கும் சூழலில் இ-பாஸ் நடைமுறை தேவையற்றது என மீண்டும் ஒரு முறை வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சர் இது குறித்து பரிசீலித்து விரைவில் நல்ல அறிவிப்பை வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.