பிரசாந்த் கிஷோர் ஆலோசனை கேட்கும் நிலை ராகுல் காந்திக்கு இல்லை.. திருநாவுக்கரசர் தடாலடி
திருச்சி: பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகள் பெற்று செயல்படும் அளவிற்கு ராகுல்காந்தி நிலைமை இல்லை என்று திருச்சி லோக்சபா உறுப்பினர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் உள்ள பெல் நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் தொடர்ந்து லாபத்தில் இயங்குவதற்கான வளர்ச்சி பணிகள் குறித்து பெல் அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளை சந்தித்து திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஆலோசனை நடத்தினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:
இன்னும் பல ஆண்டுகளுக்கு பாஜக சக்தி வாய்ந்ததாக கட்சியாகவே நீடிக்கும் - பிரசாந்த் கிஷோர் திட்டவட்டம்

பெல் நிறுவனம்
தமிழ்நாட்டில் பெல் நிறுவனம் மூன்று இடங்களில் செயல்பட்டு வருகிறது. அங்கு தொழிலாளர்களுக்கான பணி பாதுகாப்பு, மற்றும் நிறுவனம் தொடர்ந்து லாபகரமாக இயங்குவதற்கும் இங்கு அதிகாரிகளிடம் மற்றும் தொழிலாளர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டது.
மேற்கொண்டு நல்ல முறையில் நிறுவனங்கள் இயங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பெல் நிறுவன உற்பத்தி ஆர்டர் என்பது மத்திய அரசாக இருந்தாலும் மாநில அரசாக இருந்தாலும் டெண்டர் மூலமாகவோ தான் எடுக்க முடியும். சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நிறுவனத்தை லாபகரமாக என்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை மேற்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு
ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர பணியாளர்களாக ஆக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து தொழிற்சங்கம் எழுத்துப்பூர்வமாக அளிக்கப்படும் போது அதற்கு உரிய தீர்வு காண வழிகள் என்ன என்பது நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலத்திற்கு வேலைக்கு செல்ல கூடாது என்று நாம் சொல்ல முடியாது. ஆல் இந்தியா சர்வீஸஸ் தவிர்த்து அந்தந்த மாநிலங்களில் உள்ள நிறுவனங்கள் அந்த மாநிலத்தவருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரவேண்டும்.

உயர்மட்ட பாலம்
சர்வீஸ் சாலை அமைப்பதற்கு நீதிமன்றத்தில் இருந்து தீர்ப்பு வந்துவிட்டது. நிலம் கையகப்படுத்துதல் சாலை விரிவாக்கப் பணிகள் உள்ளிட்ட தேவைகளுக்காக சுமார் 2000 கோடி தேவைபடுகிறது. திமுக ஆட்சியில் உள்ளது மேலும் 2 அமைச்சர்கள் உள்ளனர். இதற்கான மாற்று திட்டங்கள் என்ன என்பது குறித்தும், உயர்மட்ட பாலம் அமைப்பது குறித்தும் அரசு மட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் உள்ளன. அதை எவ்வாறு செயல்படுத்துவதற்கான முயற்சிகள் செயல்படுத்தபடும்.

பிரசாந்த் கிஷோர் கருத்து
பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சிக்கு ஆலோசனை வழங்கும் நிறுவனமாக செயல்பட்டு வருகிறார். மோடியின் பலம் என்னவென்று ராகுல்காந்திக்கு முழுமையாக தெரியவில்லை, அவ்வாறு தெரிந்தால் மட்டுமே மோடிக்கு மாற்றாக வர முடியும் என்று பிரசாந்த் கிஷோர் கூறும் கருத்துக்கு எனக்கு உடன்பாடு இல்லை.

மோடிக்கு சிம்ம சொப்பனம் ராகுல் காந்தி
தேசிய அளவில் மோடிக்கு மாற்றாக இருக்கும் ஒரே தலைவர் ராகுல் காந்தி மட்டுமே. பிரதமர் ஆகுவதற்கு அனைத்து தகுதிகளும் கொண்ட ஒரே தலைவர் ராகுல்காந்தி. மோடிக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த கூடிய ஒரே தலைவர் ராகுல் காந்தி என்றார். பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகளைப் பெற்று செயல்படும் அளவிற்கு ராகுல்காந்தி நிலை கிடையாது. இருந்தாலும் பிரசாந்த் கிஷோர் கூறியது காங்கிரசை உஷார் படுத்தும் நடவடிக்கையாகவே எடுத்துக்கொள்ளலாம். பாஜகவை எதிர் கொள்ளக்கூடிய ஆற்றல் காங்கிரசுக்கும் அதன் தலைவருக்கு மற்றும் தோழர் கட்சிகளுக்கும் இருக்கிறது. இவ்வாறு திருநாவுக்கரசு தெரிவித்தார்.

பாஜக ஆளுமை
"பா.ஜ.க இந்திய அரசியலில் மையப்புள்ளியாக இருக்கும். அவர்கள் வெற்றி அடைகிறார்களோ அல்லது தோல்வி அடைகிறார்களோ, அதனால் எந்த மாற்றமும் ஏற்படாது. காங்கிரஸ் எப்படி 40 ஆண்டுகள் இருந்ததோ, அப்படியே பா.ஜ.கவுக்கும் இருக்கும்." என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்த ஒரு கருத்து 2 தினங்களாக சமூக தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு விரும்புவதாகவும், ஆனால் இதுபற்றி காங்கிரஸ் தலைமை முடிவெடுக்காமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் பிரசாந்த் கிஷோர் கூறியது, முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.