சனாதனவாதிகளுக்கு அடிவருடியாக இருந்தபடி, ஆண்ட பரம்பரை என சொல்வதா பெருமை? திருச்சியில் சீறிய திருமா
திருச்சி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்சியில் 'தேசம் காப்போம்' என்ற பெயரிலான பேரணி இன்று நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான விசிக தொண்டர்கள் பங்கேற்றனர்.
திருச்சி ஆர்.சி.நகர் கூட்டுச் சாலையில் தொடங்கி உழவர் சந்தை வரை இப்பேரணி நடைபெற்றது. கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இதில், பங்கேற்றார்.
தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும், இந்திய குடியுரிமைப் பதிவேடு சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டன.
இதன்பிறகு, பொதுக்கூட்டத்தில், திருமாவளவன் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: நாங்கள் பதவிப் பித்தர்களாக இருந்திருந்தால் மோடி மற்றும் எடப்பாடிக்கு ஆதரவாக இருந்து இருப்போம். நாங்கள் தன்மானத்தோடு தலை நிமிர்ந்து நிற்கிறோம். ஏனென்றால் நாங்கள் புரட்சியாளர் அம்பேத்கரின் பிள்ளைகள்.
நாங்கள் உங்களைப்போல ஆண்ட பரம்பரை என்று சொல்பவர்கள் கிடையாது. சனாதன தர்மவாதிகளுக்கு அடிவருடியாக இருந்துகொண்டு ஆண்ட பரம்பரை என்று சொல்லிக் கொள்வதில் எங்களுக்கு பெருமை இல்லை. நாங்கள் சனாதனத்தை எதிர்த்த, கௌதம புத்தரின் பிள்ளைகள்.
குலுங்கிய திருச்சி.. விடுதலை சிறுத்தைகள் தேசம் காப்போம் பேரணி.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
பாஜக என்பது வெறும் அரசியல் கட்சியோ, தேர்தல் கட்சியோ கிடையாது. பாஜகவை பின்னாலிருந்து இயக்குவது ஆர்எஸ்எஸ் போன்ற சங்க பரிவார் அமைப்புகள். ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த கோட்சேதான் தேசத்தின் தந்தை என்று சொல்லப்பட்ட மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற பயங்கரவாதி.
காந்தி தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்று சொன்னவரோ, பெண்ணடிமைத் தனத்தை ஒழிக்கவேண்டும் என்று சொன்னவரோ என்றால் கிடையாது. அவர் தீவிரமான இந்துத்துவ பற்றாளர். கோட்சே துப்பாக்கியால் சுட்ட போது, உயிர் பிரியும் நேரத்திலும் ஹரே ராம், ஹரே ராம் என்று சொன்னவர்.
காந்தியடிகள் அப்படிப்பட்ட தீவிர இந்துத்துவ பற்றாளராக, சனாதன பற்றாளராக, சாதிய பற்றாளராக இருந்தவர். இம்மை மற்றும் மறுமை மீது நம்பிக்கை கொண்டு இருந்த பழமைவாதியான காந்தியடிகளையே கோட்சே சுட்டுக் கொன்றார் என்றால் புரிந்து கொள்ளுங்கள்.. ஆர்எஸ்எஸ் இயக்கம் எவ்வளவு கொடூரமான இயக்கம்?
சங்க பரிவார் அமைப்புகளின் முதல் கோபம் முஸ்லிம்கள் அல்லது கிறிஸ்தவர்கள் மீது கிடையாது. அரசமைப்பு சட்டத்தின், மீது தான். ஏனெனில் அம்பேத்கர் வகுத்துக் கொடுத்த அரசியலமைப்பு சட்டம் தான் ஜாதியை தலைகீழாக புரட்டிப் போட்டுக் கொண்டு இருக்கிறது. ஆறு மணி நேரமாக திருச்சியில், நாம் பேரணி நடத்திய, பழைய மதுரை வழிச்சாலை சிறுத்தைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது இனி அம்பேத்கர் சாலை என அழைக்கப்படும்.
மங்கி என்றாலும் சங்கி என்றாலும் ஒன்றுதான். ஏனெனில், சங்கிகளும் மங்கி மாதிரிதான் செயல்படுவார்கள். ராம்நாத் கோவிந்த் ஆர்எஸ்எஸ் பயிற்சி பெற்று வந்தவர். அதனால்தான் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து கையெழுத்து போட்டு விட்டார். அந்த இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஒருவர் இருந்திருந்தால் கையெழுத்து போட்டு இருக்க மாட்டோம்.
குடியுரிமை சட்டத் திருத்தத்தால் முஸ்லிம்கள் மட்டுமே பாதிக்கப்படுவது கிடையாது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், கிறிஸ்தவர்கள் கூட பாதிக்கப்படுவார்கள். தேசிய மக்கள் தொகை பதிவேடு அமலுக்கு வந்தால், தந்தையின் சொந்த ஊர்.. பிறந்த சான்றிதழ் போன்றவற்றை கேட்பார்கள். எனது தாய் பிறப்பு சான்றிதழை நான் எப்படி தர முடியும். கட்டாய பிறப்பு பதிவு சட்டம் வருவதற்கு முன்பே பிறந்தவர் அவர். பலரது பெற்றோர்களும் அப்படித்தான். அவர்கள் எப்படி சான்றிதழை கொடுக்க முடியும். இவ்வாறு திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.