அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை நீக்க வலியுறுத்தி திருச்சியில் தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம்
திருச்சி: இஸ்லாமியர்களை விமர்சித்து பேசியதாக கூறப்படும் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருச்சியில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டனப் போராட்டம் நடைபெற்றது.
இது தொடர்பாக தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட களக்காடு பகுதியில் சமீபத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த ஜமாஅத் தலைவர் இஸ்லாமிய மக்களை அழைத்துக்கொண்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை சந்தித்து மனு அளிக்கச் சென்றார்.
அப்போது ராஜேந்திர பாலாஜி, உங்களுக்கு நாங்கள் ஏன் உதவ வேண்டும்? நீங்கள் எங்களுக்கு ஓட்டு போடமாட்டீர்கள். அதேபோன்று கிறித்தவர்களும் வாக்களிக்கமாட்டார்கள்.உங்களையெல்லாம் காஷ்மீரில் செய்ததைப் போல் ஒதுக்கி வைக்க வேண்டும் என்று பேசியுள்ளார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், திருச்சி மாவட்ட தலைவர் குலாம் தஸ்தகீர், செயலாளர் சையது ஜாகீர், பொருளாளர் உசேன், துணைத் தலைவர் உசைன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஹ்மதுல்லா, அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இந்த பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.
நெருப்பிலும், ஏன்! கடலிலும் கூட இறங்குவார் எங்கள் முதல்வர்.. அமைச்சரின் அதிரடி பேச்சால் பரபரப்பு!
விருப்பு வெறுப்பின்றி செயல்பட வேண்டிய ஒரு அமைச்சர் இவ்வாறு பேசியிருப்பது தவறான நடைமுறையாகும். அவரை உடனடியாக அமைச்சரவையிலிருந்து நீக்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இவ்வாறு தவ்ஹீத் ஜமாஅத் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.