திருச்சியில் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் விற்பனை.. இன்ஸ்பெக்டர், டிரைவர் சஸ்பெண்ட்
திருச்சி: பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை விற்பனை செய்த திருச்சி மாவட்டம், சிறுகனுார் காவல் நிலைய பெண் ஆய்வாளர் மற்றும் அவரது டிரைவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம், சிறுகனுார் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சுமதி (50). இவரது ஜீப் டிரைவர் ஏட்டு ராஜா (40). ஊரடங்கு காலத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்த, 2,000த்துக்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.
இதனை காவல்துறை ஆய்வாளர் சுமதி மற்றும் ஏட்டு ராஜா கள்ள மார்க்கெட்டில் ஒரு பாட்டில் விலை, 500 ரூபாயை தாண்டியதால், அவற்றை விற்க முடிவு செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை, டிரைவர் ராஜா மூலம் விற்று, பணத்தை ஆய்வாளர் சுமதி எடுத்துக் கொண்டார். மீதியுள்ள பாட்டில்களை, அதே ஸ்டேஷனில் உள்ள சில காவலர்கள் எடுத்துக் கொண்டனர்.
இது குறித்து திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணனுக்கு புகார்கள் சென்றன. விசாரணையில் மது பாட்டில்கள் விற்றது உண்மை என தெரிந்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் சுமதி, ஏட்டு ராஜா ஆகியோரை திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் ராதிகா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டதை தொடர்ந்து இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.