கொரோனாவால் தொழிலில் நஷ்டம்.. சமாளிக்க முடியாமல் 8 வயது குழந்தை உள்பட 5 பேர் தற்கொலை முயற்சி
திருச்சி: கொரோனாவால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாலும், கடன் தொல்லையாலும் திருப்பூர் தொழிலதிபர் திருச்சி அருகே தங்கும் விடுதியில் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சின்னக்கடைவீதியை சேர்ந்தவர் பலராமன்(75). இவருடைய மனைவி புஷ்பா (73). இவர்களின் மகன் ஹரிஹரன் (38). இவருடைய மனைவி திவ்யா (34). மகள் அசோக்பிரதா (8).
தாராபுரம் - பொள்ளாச்சி சாலையில் 'வெங்கட்ராம் செட்டியார்ஸ் தங்கமாளிகை' என்ற பெயரில் ஹரிஹரன் நகைக்கடை நடத்தி வருகிறார். அத்துடன் சினிமா தியேட்டர், தானிய மண்டி என்று பல்வேறு தொழிலையும் அவர் செய்து வருகிறார்.
தியேட்டர்கள்
கொரோனா ஊரடங்கு காரணமாக கடைகள் அடைக்கப்பட்டிருந்ததாலும், தியேட்டர்கள் மூடப்பட்டிருந்ததாலும், ஹரிஹரனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தொழில் வளர்ச்சிக்காக தனக்கு தெரிந்த பலரிடம் பல கோடி ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.
லாபம் இல்லை
இருப்பினும் தொழிலில் எவ்வித லாபமும் இல்லாமல் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வந்துள்ளார். இதனால் அவர் மிகுந்த மனவேதனையுடன் தனது குடும்பத்தினரிடம் அவ்வப்போது இதுகுறித்து வருத்தம் தெரிவித்து வேதனை அடைந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஹரிஹரனிடம் கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளனர்.
முழு நஷ்டம்
இதனை அவர் சீராக சமாளித்து வந்த நிலையில், நாளடைவில் தொழிலில் முற்றிலும் சரிவு ஏற்பட்டு முடங்கினார். மேலும் கடன் தொல்லை அதிகமானதால் ஹரிஹரன் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகினார். இதனையடுத்து ஹரிஹரன் மனநிம்மதிக்காக சில நாட்கள் சுற்றுலா சென்றுவரலாம் என்று தனது பெற்றோர் மற்றும் மனைவியிடம் கூறினார்.
திருச்சி மாவட்டம்
இதைத்தொடர்ந்து அவர் தனது தந்தை, தாய், மனைவி, மகள் ஆகியோரை அழைத்துக் கொண்டு சில நாட்களுக்கு முன் தாராபுரத்தில் இருந்து காரில் சுற்றுலா புறப்பட்டார். பல்வேறு ஊர்களுக்கு சென்ற அவர்கள் நேற்று முன்தினம் இரவு திருச்சிக்கு வந்தனர். பின்னர் திருச்சி மாவட்டம் வாத்தலை அருகே உள்ள ஒரு ஓட்டலில் வாடகைக்கு அறை எடுத்து அவர்கள் தங்கினர்.
பெற்றோரிடம் வேதனை
அன்று இரவு ஹரிஹரன், தான் கடன் வாங்கியது குறித்தும், கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு தொல்லை கொடுத்து வருவது குறித்தும் தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். மேலும், இதில் இருந்து விடுபட முடியும் என நம்பிக்கை இல்லை என கண்ணீர் மல்க தனது பெற்றோரிடம் கூறி வேதனையடைந்துள்ளார்.
விஷம் குடித்த குடும்பம்
இதனால் குடும்பத்தினர் அனைவரும் மனவேதனையில் ஒன்றாக விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனர். இதனையடுத்து நகைகளை மெருகூட்ட பயன்படுத்தும் திராவகத்தை (விஷம்) எடுத்து நேற்று அதிகாலை குடும்பத்தினர் ஒவ்வொருவராக குடித்தனர்.
5 பேரும் மயக்கம்
இறுதியாக சிறுமி அசோக்பிரதாவுக்கும் கொடுத்தனர். அதனை குடித்த அவள் சிறிது நேரத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு துடிதுடித்தாள். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தாய் திவ்யா அறையை விட்டு வெளியே ஓடிவந்து எனது மகளை காப்பாற்றுங்கள் என சத்தம்போட்டுவிட்டு, மயங்கி விழுந்தார். அப்போது பணியில் இருந்த ஓட்டல் ஊழியர்கள் ஓடி வந்து பார்த்தபோது, தற்கொலை செய்வதற்காக அங்கு 5 பேரும் திராவகம் குடித்து மயங்கி கிடந்தனர்.
சிகிச்சை
உடனே, மயங்கி கிடந்த அனைவரையும் ஓட்டல் ஊழியர்கள் மீட்டு, அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த வாத்தலை போலீசார் சம்பவம் நடந்த ஓட்டலுக்கு சென்று விசாரணை நடத்தினர்.