அதிமுக அரசு மீது மக்களுக்கு வெறுப்பில்லை... சசிகலாவுக்கு உறுதுணையாக இருப்போம்... கருணாஸ்!!
திருச்சி: தமிழகத்தில் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் அதிமுக மீது மக்களுக்கு வெறுப்போ, மனக்கசப்போ இருப்பதாக தெரியவில்லை. சசிகலாவுக்கு என்றும் முக்குலத்தோர் புலிப்படை உறுதுணையாக இருக்கும் என்று கருணாஸ் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கருணாஸ் கூறுகையில், ''எங்களது கட்சிக்கு இன்னும் தனிச் சின்னம் வழங்கப்படவில்லை. முக்குலத்தோர் பெருவாரியாக உள்ளனர். இருந்தாலும், இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு அடிபணிந்து கிடக்கும் சூழல்தான் உள்ளது. தேர்தல் நிலவரத்தைப் பொறுத்து, முடிவு எடுக்கப்படும்.
எடப்பாடி பழனிசாமி கட்சியின் அடிமட்ட தொண்டர் பொறுப்பில் இருந்து உயர்ந்தவர். மீண்டும் முதல்வர் வேட்பாளராக அவர் தேர்வு செய்யப்பட்டு இருப்பதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
எந்தவொரு காலக்கட்டத்திலும் முக்குலத்தோர் புலிப்படை கலைக்கப்படாது. முக்குலத்தோரின் உரிமைகளை மீட்பதற்கு அமைக்கபட்டுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் மருதுபாண்டியர்களுக்கு சிலை, மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர், கள்ளர், மறவர், அகமுடையார் ஆகியோரை இணைத்து தேவர் சமுதாயமாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து வருகிறோம். மேலும், வன்னியர் சமூகத்துக்கு வழங்கியதுபோல் உள் இடஒதுக்கீடு எங்களுக்கும் வழங்க வேண்டும்.
விடுதலைக்குப் பின்னர் அதிமுக தலைமைக்கு சசிகலா பொறுப்பு வகிப்பாரா என்ற ஊகத்துக்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால், ஜெயலலிதாவுடன் இருந்து, அதிமுகவின் அனைத்து நகர்வுகளிலும் முக்கியப் பங்கு வகித்தவர் சசிகலா. எங்கள் சமூகத்தைச் சேர்ந்த சசிகலாவுக்கு முக்குலத்தோர் புலிப்படை என்றைக்கும் உறுதுணையாக இருக்கும்'' என்றார்.