போஸ்டர்களில் அமைச்சர் மகன் படம்... புகார்களை தட்டிவிட்ட எதிர்தரப்பு... தடை போட்ட அதிமுக மேலிடம்..!
திருச்சி: அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தனது மகன் ஜவஹர்லால் நேரு மூலம் திருச்சியில் வாரிசு அரசியல் செய்வதாக எழுந்த புகாரை அடுத்து அதிமுக மேலிடத்தில் இருந்து சில கறார் உத்தரவுகள் வந்திருக்கின்றன.
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ள வெல்லமண்டி நடராஜன் அதிமுகவின் திருச்சி மாநகர செயலாளராகவும் உள்ளார். இந்த இடத்திற்கு ஆவின் கார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் போட்டிபோட்ட நிலையில் வெல்லமண்டி நடராஜன் தலைமையிடம் உருகி கட்சிப் பதவியை கைப்பற்றினார்.
இந்நிலையில் திருச்சி மாநகரில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆதரவாளர்கள் ஒட்டும் போஸ்டர்களில் அமைச்சர் படத்தை காட்டிலும் அவரது மகன் ஜவஹர்லால் நேருவின் படங்கள் பிரதான இடத்தை பிடித்துள்ளன. ஏற்கனவே துறைரீதியான விவகாரங்களில் அமைச்சர் மகன் தலையீடு உள்ளதாக கூறப்படும் நிலையில் இப்போது கட்சியிலும் அவரது ஆதிக்கம் அதிகரித்து வருவதாக திருச்சி அதிமுக சீனியர்கள் சிலர் மனம் வெம்பியுள்ளனர்.
திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளரான முன்னாள் எம்.பி. குமாருக்கும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கும் நடைபெறும் அதிகார யுத்தம் திருச்சி அதிமுகவினர் அறிந்தது. இந்நிலையில் போஸ்டர் விவகாரத்தை, ப.குமார் தரப்பில் இருந்து கட்சி தலைமைக்கு கொண்டு சென்றிருக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மு.க.ஸ்டாலினை தலைவரே என அழைத்த முதல் குரல்... அன்றே தலைவர் பட்டம் சூட்டிய அன்பில் பொய்யாமொழி..!
இதனிடையே மகன் ஜவஹர் லால் நேருவை முன்னிறுத்துவதை விடுத்து உங்களை முன்னிறுத்தி கட்சிப் பணிகளை கவனிக்குமாறும் தேர்தல் நெருங்கும் சூழலில் சலசலப்பு ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்ளுமாறும் வெல்லமண்டி நடராஜனுக்கு மேலிடத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.