"சாதி சண்டை"க்கு காரணமே திமுகதான்.. காடுவெட்டி தியாகராஜனை விரட்டும் அதிமுக.. திகைப்பில் திருச்சி
திருச்சி: பெண்களை இழிவாக பேசிய திமுக வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜனை கண்டித்து திருச்சியில் அதிமுக சார்பில் இன்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
திருச்சியின் வடக்கு மாவட்ட திமுகவின் செயலாளராக இருப்பவர் காடுவெட்டி தியாகராஜன்.. இவர் சமீபத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.. அதில், குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெண்கள் குறித்தும் காவல்துறை குறித்தும் அவதூறாக பேசியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆடியோவுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், பலரும் அந்த தியாகராஜன் பேச்சுக்கு கண்டனங்களை தெரிவித்திருந்தனர். ஆனால், அந்த ஆடியோவில் பேசியது தான் அல்ல என்று காடுவெட்டி தியாகராஜன் விளக்கம் தந்திருந்த நிலையிலும், அவர் மீதான கண்டனங்களும், எதிர்ப்புகளும் பெருகியபடியேதான் உள்ளன. சாதி சண்டைக்கு எப்போதுமே திமுகதான் காரணமாக இருந்து வருகிறது என்றும், இவர்களால்தான் மோதல்கள் ஏற்படுவதாகவும், இணையத்தில் எதிர்ப்பு கருத்துக்களும் பெருகியபடியே உள்ளன.
தியாகராஜனின் சர்ச்சை பேச்சு தொடர்பாக, அவர் மீது போலீசில் புகாரும் தரப்பட்டது.. எனினும், தியாகராஜனை கண்டித்து 2 நாளைக்கு முன்புகூட, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்சோதி தலைமையில், போராட்டம் நடந்தது.. தாயாகவும் சகோதரியாகவும் மதிக்க வேண்டிய பெண்களை இழிவாகவும், காவல்துறையை தரக்குறைவாகவும் பேசிய திமுக வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜனை கண்டித்து, பெட்டவாய்த்தலை பஸ் ஸ்டாண்டில் இந்த போராட்டம் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக திருச்சி அதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஏற்பாட்டில், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டு அருகே உள்ள அண்ணா சிலை முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் கலந்துகொண்டு திமுகவிற்கு எதிராகவும், திமுக மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜனை கண்டித்தும், அவரைக் கைது செய்யக் கோரியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக தலைமை நிலையப் பேச்சாளர் நெத்தியடி நாகேந்திரன், மாவட்ட பொருளாளர் மலைக்கோட்டை ஐயப்பன், மாவட்ட துணை செயலாளர் ஜாக்குலின், ஆவின் தலைவர் கார்த்திகேயன், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.