திருச்சியில் திருநங்கை காவலர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி.. சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு சஸ்பெண்ட்
திருச்சி: திருச்சி காவலர் பயிற்சி கல்லூரியில் பயிற்சி காவலரான திருநங்கை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து டி.ஐ.ஜி. சத்யபிரியா நடவடிக்கை எடுத்துள்ளார்
புதுக்கோட்டையை சேர்ந்த திருநங்கை திருச்சி அருகே நவல்பட்டு அண்ணாநகரில் உள்ள பெண்கள் காவலர் பயிற்சி கல்லூரியில் காவலராக பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் பயிற்சியின் போது பாலியல் ரீதியாக அதிகாரிகள் துன்புறுத்துவதாக பயிற்சி கல்லூரியின் டி.ஐ.ஜி. சத்யபிரியாவிற்கு தொலைபேசி மூலம் புகார் செய்ததாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் பயிற்சி கல்லூரியின் அதிகாரிகளிடமும், திருநங்கையிடமும் நேரடியாக விசாரணை நடத்திச்சென்றார். இதனால் பயிற்சிக்கல்லூரியை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார், போலீஸ் ஏட்டு இஸ்ரேல் ஆகியோர் திருநங்கையிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த திருநங்கை கடந்த 9-ந்தேதி காவலர் பயிற்சி கல்லூரியில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு சிகிச்சையில் இருந்த திருநங்கை, தான் தற்கொலைக்கு முயன்றதற்கு வேறு யாரும் காரணம் இல்லை என்றும், தனது உடல்நிலை காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இரண்டு பச்சிளம் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று.. தூக்கில் தொங்கிய தாய்.. அதிர்ச்சியில் கரூர்!
இந்தநிலையில் பயிற்சி கல்லூரி சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் ஏட்டு இஸ்ரேல் ஆகியோரை சென்னை காவலர் பயிற்சி கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.