பயணிகள் கவனத்திற்கு.. திருச்சி- ஈரோடு இடையே அடுத்த 5 நாட்களுக்கு ரயில் சேவைகள் ரத்து
திருச்சி: திருச்சியில் இருந்து ஈரோடு வழியாக செல்லும் 8 ரயில்களின் சேவை 5 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : ஈரோடு ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தொடர்ச்சியாக தண்டவாள பராமரிப்பு மற்றும் இதர ரயில்வே பணிகள் நடப்பதையொட்டி அந்த வழியாக திருச்சியில் இருந்து செல்லும் சில ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது. சில ரயில்கள் திண்டுக்கல் வழியாகவும், சேலம் வழியாகவும் இயக்கப்படுகின்றன.
இதில் கோவை-மன்னார்குடி(வண்டி எண்: 16616), மன்னார்குடி-கோவை எக்ஸ்பிரஸ்(வண்டி எண்: 16615), மயிலாடுதுறை-கோவை ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ்(வண்டி எண்: 12083), கோவை-மயிலாடுதுறை ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ்(வண்டி எண்:12084), பாலக்காடு- திருச்சி பயணிகள் ரயில்(வண்டி எண்: 56712), திருச்சி-பாலக்காடு பயணிகள் ரயில்(வண்டி எண்: 56713), திருச்சி-ஈரோடு பயணிகள் ரயில்(வண்டி எண்: 56109), ஈரோடு-திருச்சி பயணிகள் ரயில்(வண்டி எண்: 56110) ஆகிய 8 ரயில்களின் சேவை வருகிற 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 5 நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
கரூர் -திருச்சி மட்டுமே
திருச்சி-ஈரோடு பயணிகள் ரயில் (வண்டி எண்: 56841), ஈரோடு-திருச்சி பயணிகள் ரயில்(வண்டி எண்: 56842) ஆகிய 2 ரயில்கள் 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை திருச்சியில் இருந்து கரூருக்கும், கரூரில் இருந்து திருச்சிக்கும் இயக்கப்படும். கரூரில் இருந்து ஈரோடுக்கு செல்வது ரத்து செய்யப்பட்டுள்ளது.
மாற்றுவழியில் ரயில்கள்
மேலும் சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. மயிலாடுதுறையில் இருந்து திருச்சி வழியாக மைசூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்(வண்டி எண்: 16231) 17-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை திருச்சி, கரூர் சென்று அங்கிருந்து நாமக்கல், சேலம் வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரயில் புகழூர், ஈரோடு செல்லாது.
வாஸ்கோடாகாமா எக்ஸ்பிரஸ்
மதுரை-கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயில்(வண்டி எண்: 17616) 18-ந் தேதி மட்டும் கரூர், நாமக்கல், சேலம் வழியாக இயக்கப்படும். வேளாங் கண்ணி-வாஸ்கோடாகாமா எக்ஸ்பிரஸ் ரயில்(வண்டி எண்: 17316) 20-ந் தேதி மட்டும் கரூர், நாமக்கல், சேலம் வழியாக இயக்கப்படும். இந்த இரு ரயில்களும் அன்றைய தினம் ஈரோடு செல்லாது.
காரைக்கால் ரயில்
காரைக்கால்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில்(வண்டி எண்: 16187) 17-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மாற்று வழித்தடமாக திருச்சியில் இருந்து திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி வழியாக பாலக்காடு டவுன் சென்றடையும். திருச்சி கோட்டை, குளித்தலை, கரூர், புகழூர், கொடுமுடி, ஈரோடு, ஊத்துக்குளி, திருப்பூர், கோவை, போத்தனூர் செல்பவர்கள் மாற்று ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
மங்களூர் சென்டிரல்
மங்களூர் சென்டிரல்- சென்னை எக்மோர் எக்ஸ்பிரஸ் ரயில்(வண்டி எண்: 16160) 16-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மாற்று வழித்தடமான பாலக்காடு, பாலக்காடு டவுன், பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல் வழியாக திருச்சி வந்து சென்னை செல்லும். இதுபோன்று எர்ணாக்குளம்-காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில்(வண்டி எண்: 16188) 17-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை பாலக்காடு, பாலக்காடு டவுன், பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல் வழியாக திருச்சி வந்து காரைக்கால் செல்லும்.
நாமக்கல் வழியாக இயக்கம்
மைசூரு-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில்(வண்டி எண்: 16232) 17-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மாற்று வழித்தடமான சேலத்தில் இருந்து நாமக்கல் வழியாக கரூர் வந்து மீண்டும் பழைய வழித்தடத்தில் பயணிக்கும். சேலத்தில் இருந்து ஈரோடு, புகழூர் ரயில் நிலையங்களுக்கு செல்லாது.
வேளாங்கண்ணி ரயில்
வாஸ்கோடாகாமா- வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயில்(வண்டி எண்: 17315) 19-ந் தேதி மட்டும் சேலத்தில் இருந்து நாமக்கல் வழியாக கரூர் வந்து, அங்கிருந்து வழக்கமான வழித்தடத்தில் செல்லும். இந்த ரயில் சேலத்தில் இருந்து ஈரோடு செல்லாது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.