திருச்சி பாஜக பிரமுகர் கொலை.. மதவிரோதம் அல்ல.. தனிப்பட்ட பிரச்சினையே காரணம்.. ஐஜி திட்டவட்ட விளக்கம்
திருச்சி பாஜக பிரமுகர் கொலை குறித்து ஐஜி விளக்கம் தந்துள்ளார்
திருச்சி: "பாஜக, இந்து அமைப்பு தலைவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள்.. பாஜகவுடன் தொடர்பு வைத்துள்ள எந்தவொரு மதத்தினரையும் தாக்கக்கூடிய சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன" என்று மூத்த பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் திருச்சி பாஜக பிரமுகர் கொலை குறித்து கண்டனம் தெரிவித்திருந்தார். ஆனால்,
"முன்விரோதம் மற்றும் சொந்த பிரச்னைகளால்தான் இந்த கொலை நடந்தது என்றும், மத ரீதியிலான பிரச்னைகளால் நடக்கவில்லை" என்றும் திருச்சி ஐஜி அமல்ராஜ் விளக்கம் தந்துள்ளார்.
திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்தவர் விஜய் ரகு.. 40 வயதாகிறது.. பாலக்கரை மண்டல பாஜக செயலாளராக பதவி வகித்தவர்.. காந்தி மார்க்கெட்டில் இருசக்கர நுழைவு பகுதியில் டூவீலருக்கு சீட்டு வழங்கும் வேலையை செய்து வந்தவர்.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் விஜய் ரகு மார்க்கெட் சென்றபோது, மிட்டாய் பாபு என்பவர் 5 பேர் கொண்ட கும்பலுடன் அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது. உயிரை கையில் பிடித்து கொண்டு விஜய் ரகு தப்பி முயல.. மார்க்கெட்டுக்குள் ஓட ஓட விரட்டி அவரை அரிவாளாலேயே வெட்டி கொன்றுள்ளனர் மிட்டாய் பாபு & கோ!
பொதுமக்கள் கண் முன்னாடியே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார் விஜய் ரகு.. தகவல் அறிந்து காந்தி மார்கெட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணையை ஆரம்பித்தனர். முன் விரோதம் காரணமாகவே இந்த படுகொலை நடந்ததாக சொல்லப்படுகிறது... கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் மிட்டாய் பாபு ஒரு லாட்டரி வியாபாரி, விஜய் ரகுவின் பக்கத்து வீட்டுக்காரராம்... அரசியல் முன்விரோதம் காரணமாக இவர்களுக்குள் ஏற்கனவே நிறைய முறை தகராறு வந்துள்ளது.
இதனால் ஏற்கனவே 2 முறை விஜயரகு மீது கொலை முயற்சியும் நடந்துள்ளது.. மிட்டாய் பாபு மீது ஏற்கெனவே ஏராளமான வழக்குகள் உள்ள நிலையில், சமீபத்தில்தான் ஒரு கேஸில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.. அதனால் அவரையும், மற்ற கொலையாளிகளையும் கைது செய்ய வேண்டும் என்று உள்ளூர் பாஜக பிரமுகர்கள் கொந்தளித்துவிட்டனர்... பல தொண்டர்கள் ஆஸ்பத்திரி முன்பு திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.
ஓ இதுதான் கொடூர கொரோனா வைரஸா? இப்படித்தான் இருக்குமா!.. சீனா வெளியிட்ட பகீர் புகைப்படம்!
விஜயரகு கொல்லப்பட்டதை அறிந்து, முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன் திருச்சிக்கு வந்திருந்தார்.. விஜயரகுவின் உடலுக்கு, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது, "ஏற்கெனவே 2 முறை கொலை செய்தவரால் விஜயரகு தாக்கப்பட்டாா். ஆனால் போலீசார் இதனை கவனத்தில் கொண்டு, முன்பே கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது. நடவடிக்கை எடுக்க தவறியதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது.
ஏதேனும் ஒரு காரணத்தால் பாஜக, இந்து அமைப்பு தலைவா்கள் கொலை செய்யப்படுவது, முயற்சிப்பது மட்டுமில்லாமல், பாஜகவுடன் தொடர்பு வைத்துள்ள எந்தவொரு மதத்தினரையும் தாக்கக்கூடிய சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.. பாஜக தொடங்கிய காலம் முதல் இப்படி கொலைவெறி தாக்குதல் பலமுறை நடந்துள்ளன..." என்று பகிரங்கமாக குற்றச்சாட்டு வைத்து, விஜய் ரகு குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடும், வேலைவாய்ப்பையும் அரசு வழங்கவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.
ஆனால் விஜயரகு கொலையானது, முன்விரோதம் மற்றும் சொந்த பிரச்னைகளால்தான் நடந்தது என்றும், மத ரீதியிலான பிரச்னைகளால் நடக்கவில்லை என்றும் மத்திய மண்டல ஐஜி அமல்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
"இந்த கொலைச் சம்பவம் முற்றிலும் சொந்த பிரச்னைகளுக்காக நடந்ததாகவே விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே மத ரீதியிலான பிரச்னைகளுக்கு இதில் இடமில்லை. குற்றவாளிகளில் ஒருவா் மட்டுமே பிற மதத்தைச் சோ்ந்தவராக தெரியவந்துள்ளது. குற்றவாளிகளைத் தேடி வருகிறோம், விரைவில் கைது செய்யப்படுவர்" என்று ஐஜி அமல்ராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.