"விட மாட்டோம்".. மோடி போட்டோவும்.. கையில் ஆணியுமாக.. திரண்டு வந்து பாஜகவினர்.. திருச்சியில் செம!
மோடி போட்டோவுடன் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நுழைந்தனர் பாஜகவினர்
திருச்சி: 100 மணி நேரம் டைம் தருகிறோம்.. அதற்குள் மோடி போட்டோவை கலெக்டர் ஆபீசில் பொருத்த வேண்டும் என்று பாஜகவினர் கெடு விதித்தனர்.. இதையடுத்து, 100 மணி நேரம் கெடு முடிந்த நிலையில், மோடி போட்டோவையும், ஆணியையும் கையில் எடுத்து கொண்டு திருச்சி கலெக்டர் ஆபீசுக்குள் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அனைத்து அரசு அலுவலகங்களிலும் பாரத பிரதமரின் உருவப்படம் வைக்கவேண்டும் என்று 1978-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது... அதன்படி, தமிழகத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்களிலும் வைக்கப்பட வேண்டும் என பாஜக பட்டியலின அணி சார்பில் கடந்த 29-ந் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. அது தமிழக அரசின் தலைமை செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
அப்போது 100 மணி நேரத்திற்குள் மோடி உருவப்படம் வைக்கப்படவில்லை என்றால், பாஜக சார்பில் வைக்கப்படும் என்று கெடு விதிக்கப்பட்டது... அந்த கெடு நேற்று மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து சாயங்காலம் 4 மணிக்கு திருச்சி கலெக்டர் ஆபிசுக்குள் பாஜகவின் பட்டியலின அணி மாநில துணைத்தலைவர் பாண்டியன் தலைமையில் உறுப்பினர்கள் திரண்டு வந்தனர்.. மோடியின் உருவப்படத்தை பொருத்தும் நோக்கில் ஆணியுடன் கோஷமிட்டுக் கொண்டே வந்தனர்.. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அவர்கள் திரண்டு வந்த நேரம், அங்கு பாதுகாப்புக்கு போதிய போலீசாரும் இல்லை.. அதனால், எல்லாரும் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (ஜெயப்பிரித்தா ரூமுக்குள் சென்றனர்.. அவரிடம், "நாங்க மோடி உருவப்படம் பொருத்த ஆணியுடன் வந்திருக்கிறோம்.. அதை மாட்டி விட்டு போகிறோம்" என்றனர்.. அதற்கு ஜெயப்பிரித்தா, இன்னும் கொஞ்ச நேரத்தில் கலெக்டர் வந்துவிடுவார்.. அவரிடம் சொல்லுங்கள்" என்றார்.
அதற்கேற்றபடி கலெக்டர் எஸ்.சிவராசு சிறிதுநேரத்தில் அங்கு வந்தார்.. அவரிடமும் பாஜகவினர் மோடியின் போட்டோவை பொருத்த வேண்டும் என சொல்லி வற்புறுத்தினர்... அப்போது கலெக்டர், பிரதமர் மோடியின் போட்டோவை வாங்கி வைத்துக்கொண்டு, "இது தொடர்பாக தலைமை செயலாளரிடம் கலந்து பேசி உத்தரவு வந்ததும் அனைத்து அலுவலகத்திலும் பிரதமர் உருவப்படம் வைக்க நடவடிக்கை எடுக்கிறோம்" என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார்.
இதையடுத்து பாஜகவினர் வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசும்போது,"பிரதமர் மோடியின் உருவப்படம் எல்லா அரசு ஆபீஸ்களிலும் தமிழகத்தில் பொருத்தப்படவில்லை என்றால், அடுத்த கட்டமாக அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
தமிழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டோ பக்கத்தில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போட்டோவும் வைக்கப்பட்டுள்ளது... அந்த படம் வைப்பதற்கு எவ்வித அரசு ஆணையும் இல்லை... இதை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம்... இதை சாதாரணமாக விடப்போவதில்லை என்று சொல்லிவிட்டு சென்றனர்.