காட்டில் பிணம்.. ஹை ஹீல்ஸ்.. சொகுசு கார்.. திடீர் திருப்பம்.. ஒரே நாளில் சிக்கிய கொடூரர்கள்
காட்டுக்குள்ளேயே காரில் வைத்து தொழிலதிபர் எரித்து கொல்லப்பட்டுள்ளார்
Recommended Video
திருச்சி: காட்டுக்குள்ளே.. காருக்குள்ளே.. பெண்ணை தீ வைத்து எரிக்கப்பட்டதாக வெளியான அதிர்ச்சி சம்பவத்தில்.. திடீர் திருப்பம் எழுந்துள்ளது.. இதையடுத்து கொலையாளிகளை போலீசார் ஒரே நாளில் கைது செய்துள்ளனர்!
திருச்சி, சிறுகனூர் அருகே தச்சங்குறிச்சி என்ற காட்டுப்பகுதி உள்ளது. சுமார் 930 ஹெக்டேர் பரப்பளவில் இந்த அடர்ந்த காடு உள்ளது. ஆட்கள் நடமாட்டமே இருக்காது.
நேற்று காலை காட்டுக்குள்ளே இருந்து நெருப்பு புகை வந்து கொண்டிருப்பதையும், கார் ஒன்று எரிந்து கொண்டிருப்பதையும் அந்த வழியாக சென்றவர்கள் கவனித்து போலீசில் புகார் தந்தனர்.
ஹை ஹீல்ஸ்
விரைந்து வந்த போலீசார், அருகில் சென்று பார்த்தபோது, காருக்குள் டிரைவர் சீட்டுக்கு பக்கத்தில் சாய்ந்தபடி உட்கார வைத்து எரித்துள்ளனர். எரித்து கொல்லப்பட்டது ஆணா, பெண்ணா என்று ரொம்ப நேரமாகவே தெரியவில்லை. கடைசியில் காருக்கு அடியில் ஒரு ஹை ஹீல்ஸ் செருப்பு இருப்பதை வைத்து, இறந்துபோனது பெண்தான் என்ற சந்தேகம் எழுந்தது.
அதிர்ச்சி
அதனால் இறந்த பெண் யார், ஏன் கொன்றார்கள் என்ற விசாரணை தொடங்கியது. பிறகுதான் இறந்துபோனது ஒரு பெண் இல்லை, ஆண் என்று தெரியவந்துள்ளது.. அதிலும் இறந்தவர் ஒரு தொழிலதிபர் என்பது அதிர்ச்சிகரமான தகவல்! காரின் நம்பர் பிளேட் முற்றிலும் எரிந்துவிட்டு இருந்தது. அதனால் நம்பரும் தெரியவில்லை. ஆனால் அந்த காரின் என்ஜினை வைத்து சொகுசு கார் என்று முடிவாகி, அதன்பிறகு யார் அதன் உரிமையாளர் என்ற விசாரணை ஆரம்பமானது.
கார் விற்பனை
சம்பந்தப்பட்டவர் காட்டூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஜாகீர்உசேன், வயது 51 என்று தெரிந்தது. கார்களை வாங்கி விற்கும் கம்பெனி நடத்தி வந்துள்ளார். இதையடுத்து, ஜாகீர்உசேனின் மகன் அன்சார் உசேனை அழைத்து போலீசார் விசாரித்தனர். அப்போதுதான் அது தங்களுடைய கார் என்றும் இறந்துபோனது தன் அப்பாதான் என்றும் உறுதிப்படுத்தினார்.
நண்பர்கள்
இறந்துபோன ஜாகிர் உசேன் பெரம்பலூரில் நண்பர்களுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். கடைசியாக, குன்னுமேடு பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரிடம்தான் ஜாகிர் பேசியுள்ளார். அதனால், போலீசார் சரவணைனை அழைத்து விசாரித்தனர். அப்போதுதான் விஷயம் வெளியே வந்தது.
கொல்ல முடிவு
"நானும் ஜாகிரும் ரொம்ப நாளாகவே பிசினஸ் செய்து வருகிறோம்.. என்கிட்ட பிசினஸ்-க்காக வாங்கின பணத்தை ஜாகிர் திருப்பி தரவில்லை. அடிக்கடி நான் பணம் கேட்கவும், மிரட்டுவதாக என் மீது போலீசில் புகார் தந்தார். இந்த ஆத்திரத்தில்தான் அவரை கொல்ல முடிவு செய்தேன். கூடவே என் நண்பர்களை துணைக்கு வைத்து கொண்டேன். அதன்படி பிரச்சனையை சுமூகமாக முடிக்கலாம் என்று சொல்லி, தனியாக ஜாகிரை, கடலூர் மாவட்டம் ராமநத்தம் பகுதிக்கு வரவழைத்தோம்.
வாக்குமூலம்
ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து, அவரை கொன்றோம்.. பிறகு, காரில் உடலை எடுத்து வந்து, தச்சங்குறிச்சி காட்டில் நிறுத்தி பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிட்டோம். யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதால், காரின் நம்பர் பிளேட்டை கழட்டிவிட்டோம், எரிந்தது பெண் என தெரிய வேண்டும் என்பதால், ஹைஹீல்ஸ் செருப்பை போட்டுவிட்டு வந்தோம்' என்றனர். இப்போது சரவணன் உட்பட கொலையாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.